ETV Bharat / bharat

தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு - சசி தரூர்

author img

By

Published : Apr 9, 2023, 10:03 PM IST

தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு - சசி தரூர்
தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு - சசி தரூர்

கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் மக்களவை உறுப்பினருமான சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கர்நாடக பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான சசி தரூர் இன்று (ஏப்ரல் 9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய சசி தரூர், “கடந்த நான்கு ஆண்டுகளாக கர்நாடக மக்கள் தவறான ஆட்சியை அனுபவித்து வருகின்றனர். தவறான ஆட்சி நிர்வாகம் மற்றும் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை என்னும்போது, மக்கள், அரசின் தேவை எதற்காக என கருதுகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில் தாங்கள் அனுபவித்து வரும் தவறான ஆட்சி நிர்வாகத்தை மாற்றுவதற்கு காங்கிரஸை மரியாதைக்குரிய வகையில் பார்ப்பதில் மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். கர்நாடகாவில் தற்போது உள்ள பாஜக அரசால், மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலவில்லை. இதனிடையே மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதில், காங்கிரஸ் பல்வேறு வாக்குறுதிகளை ஏற்கனவே அறிவித்துள்ளது.

கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் மாநிலத்தின் ஐடி முதலீடு சரிந்து வருகிறது. பெங்களூரு சிறந்த மற்றும் மிகப்பெரிய ஆற்றலைப் பெற்றுள்ளது. நாங்கள் (காங்கிரஸ்) தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், இந்த சிலிக்கான் நகரத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவதே காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நோக்கமாக இருக்கும். அரசியலைத் தவிர்த்து, இந்த தேர்தலில் பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளது. அவ்வளவு சவால்களையும் காங்கிரஸ் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.

பெங்களூரு மாநகரில் போக்குவரத்து நெரிசல் உள்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. நான் முதன் முதலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களிடம் கலந்துரையாடினேன். வரி செலுத்துபவர்களிடமும் நான் பேசினேன். கிருஷ்ணா பைர் கெளடாவுக்காக பிரச்சாரம் செய்தேன். இந்த முறையும் நான் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். தேர்தலுக்கு முன்னதாகவே முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பது, கட்சியின் வழக்கம்.

முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதையே நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். மேலும் தேர்தல் முடிவடைந்த பிறகு, சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டு முதலமைச்சரை கட்சியின் உயர்மட்டக் குழு முடிவு செய்யும்” என்றார்.

இதனையடுத்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா மற்றும் கேபிசிசி தலைவர் டி.கே.சிவகுமார் இடையே முதலமைச்சர் போட்டி உள்ளதாக தகவல் வெளியாவது குறித்த கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய சசி தரூர், “தலைவர்கள் இடையே போட்டி இருப்பது இயல்பானது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. அதே போன்றுதான் கர்நாடகாவிலும் உள்ளது. நாங்கள் முதலில் தேர்தலில் வெற்றி பெறுவதையே இலக்காக வைத்துள்ளோம். பின்னர், ஒருவர் முதலமைச்சர் ஆவார். மேலும் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தற்போதைய நிலையில் பொருந்தாத ஒன்று.

முதலில் கர்நாடகாவில் ஒரு முதலமைச்சரை உருவாக்குவோம். அதன் பிறகு, பிரதமர் குறித்து ஆலோசிப்போம்” என தெரிவித்தார். கர்நாடகாவில் உள்ள 36 தனித் தொகுதிகள், 15 பழங்குடியினர் தொகுதிகள் மற்றும் 173 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க: Karnataka Election: கர்நாடக மாநில தேர்தல் தேதி அறிவிப்பு.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.