ஐஎன்எக்ஸ் வழக்கு: வெளிநாட்டிற்கு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி!

author img

By

Published : Feb 22, 2021, 3:05 PM IST

கார்த்தி சிதம்பரம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், வெளிநாட்டிற்கு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து ரூ. 305 கோடி முதலீடு பெறுவதற்கு, மத்திய வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான கார்த்தி சிதம்பரம், வெளிநாட்டிற்கு செல்ல உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது. 2 கோடி ரூபாய் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு வெளிநாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், 10 கோடி ரூபாய் வைப்பு தொகை செலுத்த வேண்டும் என மற்றொரு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதுவே இதிலும் தொடர வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "என்னுடைய கட்சிக்காரர், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் ஓடிவிடமாட்டார், எனவே, 10 கோடி ரூபாய் வைப்பு தொகையை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.

அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொண்டது. கடந்த 2019ஆம் ஆண்டு, 100 நாள்களுக்கு மேல் திகார் சிறையிலிருந்த கார்த்தி சிதம்பரம், வைப்பு தொகையாக 10 கோடி ரூபாய் செலுத்தியதை தொடர்ந்து வெளிநாட்டிற்கு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.