ETV Bharat / bharat

நபிகள் நாயகம் குறித்து அவதூறு: உ.பி. போராட்டத்தில் 304 பேர் கைது!

author img

By

Published : Jun 12, 2022, 5:16 PM IST

நூபுர் சர்மா
நூபுர் சர்மா

நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய நூபுர் சர்மாவை கைது செய்யக்கோரி உத்தரப் பிரதேசத்தில் போராட்டம் வெடித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 304 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

லக்னோ (உத்தரப் பிரதேசம்): முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததைக் கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமை உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் நடந்த போராட்டத்தில் எட்டு மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்து நூபுர் சர்மா கடந்த சில நாட்களுக்கு முன் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நூபுர் சர்மாவை சஸ்பெண்ட் செய்து பாஜக அறிவித்தது.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 10) நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் நூபுர் சர்மாவைக் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடைபெற்றது. சில மாவட்டங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்தது. பிரயாக்ராஜில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டு, கல் வீச்சு தாக்குதலும் நடைபெற்றது. இதையடுத்து காவல் துறையினர் கண்ணீர்புகை குண்டு வீசி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் கூறுகையில்,"வெள்ளிக்கிழமை போராட்டம் தொடர்பாக எட்டு மாவட்டங்களில் இருந்து 304 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரயாக்ராஜில் மட்டும் 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சஹாரன்பூரில் 71 பேர், சஹாரன்பூரில் 71 பேர், அம்பேத்கர் நகர் மற்றும் மொராதாபாத்தில் தலா 34 பேர், ஃபிரோசாபாத்தில் 15 பேர், அலிகாரில் 6 பேர் மற்றும் ஜலானில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

போராட்டம் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அலுவலர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 2 நபர்களின் வீடுகளில் சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகக் கூறி, மாவட்ட நிர்வாகம் அவர்களின் வீடுகளை இடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நூபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி ஜமா மசூதியில் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.