ETV Bharat / bharat

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்... அரசியலும், ஆன்மிகமும்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 3:48 PM IST

Updated : Sep 17, 2023, 7:04 PM IST

vinayagar chaturthi Special Story
அரசியலுக்காக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களா? "விநாயகர்" அரசியலுக்கு இழுக்கப்பட்டாரா?

Vinayagar Chaturthi 2023: மும்பையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி, தற்போது இந்தியா முழுவதும் கொண்டாட காரணம் என்ன? விநாயகர் சதுர்த்தி குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை: இந்தியாவில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தபடியாக இந்துக்கள் ஒன்று இணைந்து கொண்டாடக்கூடிய நிகழ்வு என்றால், அது விநாயகர் சதுர்த்திதான். இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைக் கொண்டு சென்றதில் வலது சாரி அரசியலுக்கும் முக்கிய பங்கு உள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் குறித்த குறிப்பு வீர சிவாஜி மற்றும் பாலகங்காதர திலகர் உடன் தொடர்புடையது.

விநாயகர் பிறந்தநாளாக கருதப்படும் சுக்கில சதுர்த்தி தினத்தை, வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். 16ஆம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் சிவாஜி, விநாயகர் சதுர்த்தியைப் பிரபலமாக்கினார். அவரின் குல தெய்வமான கணபதிக்கு அனைவரும் விழா எடுக்க இவ்வாறு செய்தார்.

மராட்டிய ஆட்சியிலிருந்த பேஷ்வாக்கள் இதற்கு ஊக்கம் அளித்தனர். மராட்டிய ஆட்சி முடிவுக்கு வரும் வரை விநாயகர் சதுர்த்தி பிரபலமாக இருந்தது. அதன்பின், மும்பையில் மீண்டும் விநாயகர் சதுர்த்தியைப் பிரபலப்படுத்தியவர், பாலகங்காதர திலகர் ஆவார்.

விநாயகரை வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம்: 1893ஆம் ஆண்டு முதல் பேஷ்வாக்கள் குடும்ப விழாவாக இருந்த விநாயகர் சதுர்த்தியை பொதுவான விழாவாக மாற்றியவர், பாலகங்காதர திலகர். பிளேக் நோய்க்கு எதிராக ஆங்கிலேயர் நடவடிக்கைகள் எடுக்கும்போது எலிகள் கொல்லுவதற்குச் சன்மானம் அறிவிக்கப்பட்டது.

அப்போது, விநாயகர் வாகனத்தை அழிப்பதா எனக் கூறி இந்துக்களைத் திரட்டினார், பாலகங்காதர திலகர். இதனால், எலிகளைக் கொல்வதற்கான திட்டத்தைக் கைவிட்டது, அப்போது இந்தியாவில் ஆட்சி செய்த ஆங்கிலேய அரசு. அதன் பின்பு, விநாயகர் சதுர்த்தி மும்பை மாநகரம் முழுவதும் நடக்கத் தொடங்கியது.

இதையும் படிங்க: 'சனாதனம் காக்கும் விநாயகர்' - குடந்தையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை!

மும்பை முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்: சிவாஜி மற்றும் பேஷ்வாக்கள் மட்டும் கொண்டாடிய சதுர்த்தி இந்து விழாவாக மும்பையில் வளர்ந்தன. சுதந்திரத்திற்குப் பின், மும்பையில் இந்து உணர்வுகளோடு மராட்டிய உணர்வையும் வளர்க்க விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பெரிதும் உதவியன.

1960-இல் ‘மராட்டா மராட்டியர்களுக்கே’ என்று அரசியலுக்கு வந்த இளைஞர் பால் தாக்கரே. இவரால் உருவாக்கப்பட்டது சிவனோ கட்சியாகும். இவருக்கு கட்சி மற்றும் மராட்டிய உணர்வை ஊக்குவிப்பதற்கு விநாயகர் ஊர்வலங்கள் பெரிது உதவியன. இவரால் விநாயகர் ஊர்வலங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுவே அரசியலில் விநாயகர் அடைந்த முக்கிய இடமாகும். 1995-இல் சிவனோவிற்கு ஆட்சி மற்றும் அதிகாரங்கள் கிடைக்கப் பெற்றன. இதன் பின் விநாயகர் சதுர்த்தி சில அரசியல் காரணங்களுக்காக நாடு முழுவதும் கொண்டு சேர்க்கப்பட்டு இருந்தன.

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்: பெரியார் இந்து மத எதிர்ப்பு பிரச்சாரத்தில் அதிகம் தாக்குதலுக்கு உள்ளானது, விநாயகர் மட்டுமே. பெரியாரின் எதிர்ப்பு பிரச்சாரத்தில் அனைத்து கடவுளும் தாக்கப்பட்டாலும், விநாயகர் சிலை மட்டுமே உடைபட்டது. இந்துக்கள் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் முன் விநாயகரை வழிபடுவது வழக்கம். அதே போல், பெரியார் இந்து மத எதிர்ப்பு பிரச்சாரங்களைத் தொடங்கும் முன், விநாயகரை வைத்து ஆரம்பிப்பதையே வழக்கமாகக் கொண்டு இருந்தார். 1980-களில்தான் விநாயகர் சதுர்த்தி விழா தமிழ்நாட்டில் கொண்டாட தொடங்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பற்றி தெரிவதற்கு முன், 1982-களில் கன்னியாகுமரியில் நடைபெற்ற மண்டைக்காடு கலவரம் பற்றி தெரிய வேண்டும். கன்னியாகுமரியில் உள்ள நாகர்கோவிலில் ஜெப வாரம் கடைபிடிக்கப்பட்டு, நாகர்கோவில் பகுதியில் ஊர்வலம் நடத்தப்பட்டு, அதன் மையப் பகுதியில் ஒளிரும் சிலுவை ஒன்று போக்குவரத்து நிழற்கூடை அருகே வைக்கப்பட்டது.

அதன்பின், திருவிழா முடிந்து அச்சிலுவை அகற்றப்பட்டன. அதே பகுதியில் இந்து நபர் ஒருவர் விநாயகர் சிலையை வைத்தார். அதற்கு வழிபாடும் நடத்தினார். மகாசிவராத்திரி வரும் நேரத்தில் சட்ட ஒழுங்கை காரணம் காட்டி விநாயகர் சிலை அங்கு இருந்து காவலர்களால் அகற்றப்பட்டது. இதனால், கடையடைப்பு மற்றும் இந்துக்கள் ஒன்று இணைந்து போராட்டம் நடைபெறத் தொடங்கின. இதனால், 46 முறை காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் 6க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றன.

இதையும் படிங்க: விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வதால் மக்களுக்கு என்ன பலன்? - உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி

தமிழ்நாட்டில் தமிழ் படங்களின் மூலம் பிரபலம் அடைந்த விநாயகர்: 1990-களுக்குப் பின்பே விநாயகர் சதுர்த்தி உழைக்கும் மக்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் அனைவரும் கொண்டாடப்படக் கூடிய நிகழ்வாக மாறியது. அஜித், விஜய் படங்களிலும் விநாயகருக்கான பாடல்கள் பல இடம் பெற்றன. இதனால் தமிழர்களிடையே பிரிக்க முடியாத இடத்தைப் பெற்றார் விநாயகர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த கடவுள் விநாயகர்: முக்கிய நடிகர் படங்களின் மூலமாகவும், விநாயகர் சம்பந்தமான தொடர்கள் மூலமாகவும் பெரியவர்கள் மத்தியிலும், குறும்புக் கடவுளாக கார்டூன் வழியாகக் குழந்தைகளையும் கவர்ந்தார், விநாயகர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கருத்து: தமிழக அரசின் அரசாணைக்கு மாறாக, விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்தால், அந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படாது என்று கூறி, வழக்குகளை முடித்து வைத்தார், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

மேலும், சிலை வைத்து, அவற்றை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று விநாயகர் கூறவில்லை என்றும், இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், அரசியல் காரணங்களுக்காகவே விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்த நீதிபதி, இந்த கருத்துகள் அனைத்தும் தனது சொந்த கருத்துகள் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "சனாதனம் இந்துக்களின் நித்தியக் கடமை.. கருத்து சுதந்திரத்தை கொண்டு காயப்படுத்தாதீர்கள்" - சென்னை உயர்நீதிமன்றம்!

Last Updated :Sep 17, 2023, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.