ETV Bharat / bharat

AI பயன்படுத்தி மோசடி - கேரள காவல் துறையில் சிக்கியது எப்படி?

author img

By

Published : Jul 18, 2023, 8:20 AM IST

Police recover extorted money in Kerala AI aided scam case
செயற்கை நுண்ணறிவு(AI) உதவியுடன் மோசடி - துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்ட கேரள காவல்துறை!

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பறிக்கப்பட்ட பணத்தை கேரள காவல் துறையினர் மீட்டுள்ளனர்.

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உதவியுடன் நடத்தப்பட்ட மோசடி நிகழ்வில், மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை கேரள போலீசார் மீட்டு உள்ளனர். குறிப்பிட்ட நபரின் தொலைபேசி எண்ணை மோசடி நபர்கள் பொதுவான வாட்ஸ் அப் குழுவில் இருந்து எடுத்து, அதை ஹேக் செய்து, அந்நபரை மிரட்டி பணம் பறித்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பத்திரிகையாளர்களைச் சந்தித்த கோழிக்கோடு காவல் துறை துணை ஆணையர் கே.இ.பைஜு, கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், அவர் இழந்த 40 ஆயிரம் ரூபாயை கேரள போலீஸ் சைபர் ஆபரேஷன் பிரிவால் மீட்கப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.

மோசடி கும்பல், பொதுவான வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள தொலைபேசி எண்ணை ஹேக் செய்து, அந்த குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் விவரங்களை சேகரித்து மோசடியில் ஈடுபட்டு உள்ளது. புகார்தாரருக்கு மோசடி செய்பவரிடமிருந்து வாட்ஸ் அப் அழைப்பு வந்தது. அவர் தனக்கு மிகவும் பரிட்சயமானவர் என்றும், குறிப்பிட்ட நபரின் முன்னாள் சக ஊழியரின் ஊரான ஆந்திராவைப் பற்றியும் குறிப்பிட்டு அவரது நம்பிக்கையைப் பெற்று உள்ளார்.

துபாயில் உள்ள உறவினரின் சிகிச்சைக்காக ராதாகிருஷ்ணனிடம் ரூ.40,000 பணம் கேட்டு அந்த கும்பல் கைவரிசையைக் காட்டி உள்ளது. அவர்கள் கேட்ட தொகையை ராதாகிருஷ்ணன் வழங்கிய நிலையில், அந்த கும்பல் மேலும் ரூ.35,000 கேட்டு உள்ளது. இதனை அடுத்து, ராதாகிருஷ்ணனுக்கு சந்தேகம் ஏற்படவே கேரள காவல் துறையின் சைபர் பிரிவை அணுகி உள்ளார்.

ராதாகிருஷ்ணனை வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்ட மோசடி நபர், ஆந்திராவில் பணியாற்றிய அவரது சக ஊழியரைப் போன்ற தோற்றத்துடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. தான் துபாயில் இருப்பதாகவும், தனது உறவினரின் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும், வீட்டிற்கு வந்தவுடன் அதைத் திருப்பித் தருவதாகவும் பணத்தை அனுப்புமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி உள்ளனர்.

மோசடி நபர்கள் குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள வங்கிக்கு பணத்தை மாற்றி உள்ளதாகவும், மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட மற்றவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும் என்று கோழிக்கோடு காவல் துறை துணை ஆணையர் தெரிவித்து உள்ளார்.

அந்நியர்களிடமிருந்து வரும் பேஸ்புக் நட்புக் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம் என்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டு உள்ளார். அறிமுகமில்லாத வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகள் மூலம் நிதி உதவி கோரினால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம் என காவல் துறை வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இதுபோன்ற போலி அழைப்புகள் வந்தால், உடனடியாக கேரள சைபர் ஹெல்ப்லைன் எண் 1930க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த சேவை 24 மணி நேரமும் தங்கு தடையின்றி இயங்கி வருவதாக கேரள காவல்துறை தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: Oommen Chandy: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.