ETV Bharat / bharat

அசாம் போக்சோ கைதுகள் - தமிழ்நாடு அளிக்கும் படிப்பினை என்ன?

author img

By

Published : Mar 5, 2023, 11:04 PM IST

அசாம்
அசாம்

அசாம் மாநிலத்தில் போக்சோ வழக்குகளில் அதிரடியாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுபோன்ற காதல் மற்றும் திருமணம் சார்ந்த போக்சோ வழக்குகளில், தமிழ்நாட்டில் சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் பரிந்துரைத்த அறிவுரைகளை அசாம் அரசு பின்பற்றலாம்.

ஹைதராபாத்: அசாம் மாநிலத்தில் கடந்த மாதம் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ வழக்குகளில், ஆயிரக்கணக்கான இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இரவு நேரங்களில் திடீரென வீடுகளுக்குள் புகுந்த போலீசார், திருமணமான இளைஞர்களை கைது செய்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை திருமணம் செய்தவர்களை இப்போது கைது செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அசாம் மாநிலத்தில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு குழந்தை திருமணமே மிகப்பெரிய காரணம் என்றும், அதன் காரணமாகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அம்மாநில அரசு கூறியது. மேலும், தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி, அசாம் மாநிலத்தில் சுமார் 32 சதவீத பெண்கள், 18 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்வதாகவும், சுமார் 12 சதவிகித பெண்கள் 18 வயதை அடைவதற்கு முன்பே கர்ப்பமாகின்றனர் என்றும் கூறியது.

குழந்தைகள் இறப்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பெண்கள் குழந்தை திருமண விகிதத்தில் தேசிய அளவிலான சராசரியைவிட அசாம் மாநிலத்தில் அதிகமாக இருப்பதாகவும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா விளக்கமளித்திருந்தார்.

அதனால் முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியே போலீசார் இளைஞர்களை போக்சோவிலும், குழந்தை திருமண தடை சட்டத்திலும் கைது செய்தனர். ஓரிரு நாட்களிலேயே ஆண்கள், பெண்கள் என சுமார் மூன்றாயிரம் இளைஞர்கள் கைதாகினர். 14 வயதுக்கும் கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்சோ வழக்கும், 14 முதல் 18 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்வதவர்கள் மீது குழந்தை திருமண தடை சட்ட வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கைதான அனைவரும் திருமணமாகி குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தவர்கள். 18 வயதை எட்டாமல் திருமணம் செய்திருந்தாலும், பெரும்பாலும் இருவரது விருப்பத்துடனேயே திருமணம் செய்திருந்தனர். இதனால், அசாம் அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், பிரசவத்திற்காக சிறுமிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்போது, அதுகுறித்த தகவல் தங்களுக்கு கிடைக்கும் என்றும், அதை வைத்து சிறுமியின் கணவரை தாங்கள் எளிதாக கைது செய்வோம் என்றும் கூறினார்.

காவல்துறை கூறும் இந்த எளிய நடவடிக்கை, விழிப்புணர்வில்லாத எளிய மக்களை கடுமையாக பாதித்தது என்றுதான் கூற வேண்டும். சான்றாக, அசாமில் 16 வயது கர்ப்பிணியை, கைது நடவடிக்கைக்கு பயந்து அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. இதனால் அந்த கர்ப்பிணி இறந்துவிட்டார்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், திருமண வயது குறித்து சட்டங்கள் இயற்றப்பட்டாலும், இன்றளவும் ஆதிவாசி, பழங்குடியின மக்கள் பலர் 18 வயதை எட்டாமலேயே திருமணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படியிருக்கையில் அசாமில் விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டவர்கள் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.

கவுஹாத்தி உயர்நீதிமன்றம் கேள்வி:

போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் முன்ஜாமீன் கோரி கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கவுஹாத்தி உயர் நீதிமன்றம், அசாம் அரசுக்கு கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த கைது நடவடிக்கையில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் உள்ளனவா? எந்த அடிப்படையில் போக்சோ வழக்குகளில் கைது செய்துள்ளீர்கள் என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியது.

இந்த வழக்குகள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியவை அல்ல, இந்த நடவடிக்கை மக்களின் வாழ்க்கையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தது. கைதானவர்களின் குடும்பங்களில் குழந்தைகள், முதியவர்கள் இருக்கின்றனர், அவர்களது வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதுபோன்ற போக்சோ வழக்குகளில் அசாம் அரசு தமிழ்நாட்டை பின்பற்றலாம் என்றும் கருத்து தெரிவித்தது.

தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகளில் புதிய விதிமுறைகள்:

18 வயதை எட்டுவதற்குள் நடக்கும் காதல் திருமணங்களில் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அசாமில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல மாநிலங்களில் இதுபோன்ற வழக்குகள் உள்ளன. தமிழ்நாட்டில் இதுபோன்ற போக்சோ வழக்குகளை கையாள்வதில் அண்மையில் சில புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியது.

அதன்படி, 18 வயதுக்குட்பட்டோரின் திருமணம் மற்றும் காதல் திருமண வழக்குகளில், அவசரப்பட்டு போக்சோ வழக்கில் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி மனுதாரரை விசாரணை செய்யலாம், அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாததற்கான காரணங்கள், விவரங்களையும் வழக்கில் பதிவு செய்ய வேண்டும். போக்சோ வழக்குகள் அனைத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

இதுபோன்ற போக்சோ வழக்குகளை கையாளும் நீதிபதிகளுக்கு முடிவெடுக்க சிறப்பு அதிகாரம் அளிக்கும் வகையில் போக்சோ சட்டத்தை திருத்தவும் பரிந்துரை செய்தது. இந்த அறிவுறுத்தல்கள் அடிப்படையில், இதுபோன்ற போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது செய்யக்கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தினார்.

அசாம் அரசு என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் பரிந்துரைத்த அறிவுரைகளை பின்பற்றலாம். போக்சோ கைதுகளை அவசர கதியில் செய்யாமல், மக்களின் வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கவும் தமிழ்நாட்டில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றலாம். 18 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிகளை, தாய்மார்களை மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.

இதையும் படிங்க: நடுவானில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்திய மாணவர் - அமெரிக்கன் ஏர்லைன்ஸில் சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.