ETV Bharat / bharat

Cheetah : குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழப்பு - என்ன காரணம்?

author img

By

Published : Aug 2, 2023, 5:23 PM IST

Chetah
Chetah

குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கிப் புலி உயிரிழந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களில் பலியான சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்து உள்ளது.

டெல்லி : குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கிப் புலி உயிரிழந்தது. கடந்த ஐந்து மாதங்களில் பலியான சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப் புலிகள் இனத்தை கொண்டு வரும் விதமாக கடந்த ஆண்டு நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 5 பெண், 3 ஆண் சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் கடந்த பிப்ரவரி மாதம், 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் மேலும் 12 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி தனது 72வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகளை மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டார். இந்த சிவிங்கி புலிகளை வனத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இருப்பினும் சிவிங்கிப் புலிகள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) மீண்டும் ஒரு சிவிங்கிப் புலி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாத்ரி என்ற பெண் சிவிங்கி புலி இறந்து கிடந்ததாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்து உள்ளனர்.

இறப்பிற்கான காரணம் தெரியவராத நிலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு உள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதேநேரம் மீதமுள்ள 14 சிவிங்கி புலிகள் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குனோ தேசிய பூங்காவின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் நமீபிய நிபுணர்களால் எஞ்சி உள்ள சிவிங்கி புலிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 5 மாதங்களில் மட்டும் பூங்காவில் உயிரிழந்த 9வது சிவிங்கி புலி தாத்ரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 9 சிவிங்கிப் புலிகளில் 3 பிறந்து சில நாட்களே ஆன குட்டி சிவிங்கி புலிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், கடந்த மாதம் மட்டும் நான்கு நாட்களில் இரண்டு ஆண் சிவிங்கிப் புலிகள் இறந்து என்பது குறிப்பிடத்தக்கது. சிவிங்கி புலிகளுக்கு பயன்படுத்தப்பட்ட தரமற்ற ரேடியோ காலர்கள் அவை உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், அதற்கு பூங்கா நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர். அதேநேரம் அண்மையில் பூங்காவை விட்டு வெளியேறிய முன்னாள் ஓட்டுநரான சுனில் ஓஜா, பூங்காவில் வழங்கப்படும் தரமற்ற உணவு மற்றும் பசியின் கொடுமையால் சிவிங்கிப் புலிகள் இறந்ததாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு.. பிரதமர் மணிப்பூர் செல்ல வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.