ETV Bharat / bharat

பெண்களுக்கு எதிரான கொடுமைகளின் தலைநகராக மாறுகிறதா டெல்லி? - மகளிர் ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

author img

By

Published : Aug 13, 2023, 12:03 PM IST

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் தலைநகர் ஆகும் டெல்லி - ஓராண்டில் மட்டும் 92 ஆயிரம் வழக்குகள் பதிவு!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் தலைநகர் ஆகும் டெல்லி - ஓராண்டில் மட்டும் 92 ஆயிரம் வழக்குகள் பதிவு!

டெல்லி மகளிர் ஆணையத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 181-உதவி மைய எண் மூலம் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்பட்டு, 92 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி: நாட்டின் தலைநகரான டெல்லியில், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட பாதிப்புகள் தொடர்பான புகார்கள் அதிகம் பதிவாவதால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் தலைநகராக டெல்லி மாறி வருகிறதா என்ற அச்சம் அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது.

டெல்லி மகளிர் ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையை அதன் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் (Swati Maliwal), நேற்று (ஆகஸ்ட் 12) வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சுவாதி மாலிவால் பேசியதாவது, “டெல்லி மகளிர் ஆணையத்திற்கு கடந்த ஓராண்டில் மட்டும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து இருக்கிறது. ஆணையத்தின் 181 என்ற ஹெல்ப்லைன் எண் மூலம் இந்த ஓராண்டில் மட்டும் 92,004 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

டெல்லி மகளிர் ஆணையத்தில், வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் இடைவெளி இன்றி இயங்கும் கட்டணம் இல்லாத ஹெல்ப்லைன் எண் 181 மூலமாக, கடந்த 7 ஆண்டுகளில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்பட்டு உள்ளன. 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பு ஆண்டு ஜுலை மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 6 லட்சத்து 30 ஆயிரத்து 288 அழைப்புகள் பெறப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, குடும்ப வன்முறைகள் தொடர்பாக 38,342 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடன் மோதல் தொடர்பாக 9,516 வழக்குகளும், பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் கொடுஞ்செயல்கள் தொடர்பாக 5,895 வழக்குகளும், போக்சோ தொடர்பாக 3,647 வழக்குகளும், கடத்தல் தொடர்பாக 4,229 வழக்குகளும் சைபர் குற்றங்கள் தொடர்பாக 3,558 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

பெண்கள் மாயமானது தொடர்பாக 1,552 புகார்கள் ஹெல்ப்லைன் எண் மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நரேலா பகுதியில் இருந்து 2,976 புகார்களும், 1,651 புகார்கள் பல்ஸ்வா பண்ணை பகுதியில் இருந்தும், 1,523 புகார்கள் புராரி பகுதியில் இருந்தும், 1,371 புகார்கள் கல்யாண்புரி பகுதியில் இருந்தும், 1,221 புகார்கள் ஜஹாங்கீர்புரி பகுதியில் இருந்தும் பெறப்பட்டு உள்ளன.

பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் கொடுஞ்செயல்கள் தொடர்பாக புராரி (175), நரேலா (167), கொவிந்த்புரி (105), உத்தம் நகர் (89), சுல்தான்புரி (86) வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. போக்சோ தொடர்பாக நரேலா (141), பல்ஸ்வா பண்ணை (91), சமய்பூர் பட்லி (71), பிரேம் நகர் (68) நிஹால் விஹார் பகுதியில் 66 வழக்குகள் பதிவாகி உள்ளன.

21 முதல் 31 வயதினர் 41.5 சதவீதத்தினரும், 31 முதல் 40 வயதினர் 21.8 சதவீதமும், 11 முதல் 20 வயதினர் 18.41 சதவீதமும், 41 முதல் 50 வயதினர் 7.26 சதவீதத்தினரிடம் இருந்தும் புகார்கள் பெறப்பட்டு உள்ளன. பெண்கள், சிறுமிகளுக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் பொருட்டு ‘181’ என்ற ஹெல்ப்லைன் எண் செயல்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுதொடர்பான அறிக்கை மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக சுவாதி மாலிவால் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: மத்தியப்பிரதேச அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு - பிரியங்கா காந்தி மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.