ETV Bharat / bharat

ஓட்டைகள் மூலம் குற்றவாளி தப்பிக்க சட்டம் அனுமதிக்காது - போக்சோ வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

author img

By

Published : Nov 18, 2021, 12:59 PM IST

Updated : Nov 18, 2021, 1:54 PM IST

போக்சோ
போக்சோ

Skin to Skin தொடுதல் இருந்தால் தான் போக்சோ சட்டம்(POCSO Act) செல்லும் என்ற மும்பை உயர் நீதிமன்ற(Bombay High Court) தீர்ப்பை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போக்சோ வழக்கு ஒன்றில் மும்பை உயர் நீதிமன்றம் (Bombay High Court) வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்து, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது .

சட்டத்தின் ஓட்டைகள் மூலம் குற்றம் புரிந்த நபர் தப்பிச் செல்வதை சட்டம் ஒரு போதும் அனுமதிக்காது எனத் தீர்ப்பில் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

12 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலைத் தொட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா, குற்றஞ்சாட்டப்பட்டவர், அந்த சிறுமியின் உடைகளைத் தொட்டுத்தான் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார் எனவும், தோலும் தோலும் தொடும்(Skin to Skin) விதமாக சீண்டல் இருந்தால்தான் போக்சோ சட்ட விதி செல்லுபடியாகும் எனக் கூறி குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்து தீர்ப்பளித்தார்.

2021 ஜனவரி 19ஆம் தேதி நீதிபதி புஷ்பா வழங்கிய இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசும், தேசிய பெண்கள் ஆணையமும்(National Commission for Women) உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

நோக்கம் தான் முக்கியம்

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு யு லலித் (Justice UU Lalit), ரவீந்திர பட் (Justice S Ravindra Bhat), பேலா திரிவேதி (Justice Bela M Trivedi) ஆகியோரின் முன் நடைபெற்றது. வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், "பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் முக்கியமான அம்சம் என்பது குற்றத்தின் நோக்கமே தவிர, பாதிக்கப்பட்டவருடன் தோலுடன் தோல் தொடர்பு (Skin to Skin) இருந்ததா என்பது அல்ல. எனவே, குழந்தையை தவறான நோக்கில் பாலியல் சீண்டலுக்கு உட்டுபடுத்துல் போக்சோ சட்டம் (POCSO Act) பிரிவு 7க்கு பொருந்தும்" எனத் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

நீதிபதி ரவீந்திர பட் தனது பிரத்யேகத் தீர்ப்பில், "உயர் நீதிமன்றத்தின் பார்வை குழந்தைகளின் கண்ணியத்தை சிறுமைப்படுத்தி, அவர்களுக்கு எதிரான செயலை சாதாரணமாக்கி, அங்கீகரிக்கும் விதமாக அமைந்துள்ளது. தவறான முடிவை உயர் நீதிமன்றம் எடுத்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

எனவே, "சட்டத்தின் ஓட்டைகள் மூலம் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தப்பிச் செல்வதை சட்டம் ஒரு போதும் அனுமதிக்காது" எனக் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு மூன்றுவருடம் கடுங்காவல் தண்டனையும் ஒரு மாத சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - தஸ்லிமா நஸ்ரின்

Last Updated :Nov 18, 2021, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.