மேற்கு வங்கத்தில் கால்நடைகளை அச்சுறுத்தும் லம்பி வைரஸ் - நாளை மத்தியக்குழு ஆய்வு!

author img

By

Published : May 23, 2023, 4:55 PM IST

Lumpy virus

மேற்குவங்க மாநிலத்தில் டார்ஜிலிங், கலிம்போங் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகளுக்கு லம்பி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய நாளை மத்தியக்குழு மேற்கு வங்கம் செல்கிறது.

மேற்குவங்கம்: இந்தியாவில் கடந்த ஆண்டு குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் ஏற்பட்டது. 'லம்பி' என்ற வைரஸ் தாக்குதலால் இந்த தோல் நோய் ஏற்பட்டது. இதனால், கால்நடைகளுக்கு கால்களில் வீக்கம், தோலில் கட்டிகள் ஏற்பட்டன. இந்த நோயின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. குறிப்பாக பசு மாடுகள் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டன. நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் கால்நடைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டதாக மத்திய கால்நடை பராமரிப்புத்துறைத் தகவல் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் 14 கால்நடைகளுக்குத் தோல் கழலை நோய்!

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மேற்குவங்க மாநிலத்தில் லம்பி வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக டார்ஜிலிங், கலிம்போங் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் டார்ஜிலிங்கில் 400 கால்நடைகளும், கலிம்போங்கில் 2,000 கால்நடைகளும் லம்பி வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன.

அதில் 36-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இந்த வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளன. அதேநேரம், கால்நடைகளை குணப்படுத்தும் பணிகளிலும் மாவட்ட நிர்வாகங்கள் கவனம் செலுத்தியதால், டார்ஜிலிங்கில் 200 கால்நடைகளும், கலிம்போங்கில் 1,200 கால்நடைகளும் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து லம்பி வைரஸ் பரவி வருகிறது. மாடுகள் மட்டுமல்லாமல் ஆடுகளும் இந்த தோல் நோயால் பாதிக்கப்படுகின்றன. டார்ஜிலிங்கில் சுகியாபோக்ரி, ரிம்பிக், லோதாமா மற்றும் பிஜன்பரி ஆகிய இடங்களில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் இந்த லம்பி வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நோய்த் தாக்குதலுக்காக தடுப்பூசி செலுத்துவதற்காக மாநில அரசுக்கு ஒன்றரை கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய கால்நடை மேம்பாட்டுத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா தெரிவித்தார்.

இது குறித்து டார்ஜிலிங் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜு பிஸ்தா கூறுகையில், "மேற்கு வங்கத்தில் மலை மாவட்டங்களில் லம்பி வைரஸ் தொற்று பரவி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணும்படி, மத்திய அமைச்சர்கள் பர்ஷோத்தம் ருபாலா, சஞ்சீவ் குமார் பால்யன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். கடந்த ஏப்ரல் மாதம் முதல் லம்பி வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் அதைத் தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால்தான் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். லம்பி வைரசால் இறந்த கால்நடைகளின் உரிமையாளர்களு்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றார்.

கலிம்போங் மாவட்டத்தில் இரண்டு தாலுகாவில் லம்பி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதேநேரம் ஏராளமான கால்நடைகள் குணமடைந்து வருவதாகவும் கலிம்போங் மாவட்ட கால்நடைப் பராமரிப்பு மற்றும் கால்நடை மேம்பாட்டுத்துறை துணை இயக்குநர் தேவன் பிரதான் தெரிவித்தார்.

டார்ஜிலிங் மாவட்ட கால்நடை மேம்பாட்டுத் துறையின் துணை இயக்குநர் அசித்குமார் ராணா கூறும்போது, "நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் கால்நடைகளில் இருந்து லம்பி வைரஸ் பரவியுள்ளதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். அதனால்தான் இந்திய-நேபாள எல்லையில் கண்காணிப்பை அதிகரிக்க எல்லைப்பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

மேற்குவங்கத்தில் லம்பி வைரஸ் பரவல் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய நிபுணர்கள் குழு நாளை(மே.24) செல்கிறது. மேற்குவங்க மாநிலத்தைப் போலவே அண்டை மாநிலமான சிக்கிமிலும் லம்பி வைரஸ் பரவி வருகிறது.

சிக்கிம் மாநிலத்தில், சோரோங், பாக்யோங் மற்றும் நாம்ச்சி மாவட்டங்களில் லம்பி வைரசால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வெளி மாநிலங்களில் இருந்து கால்நடைகள் வருவதற்கு சிக்கிம் அரசு தடை விதித்துள்ளது.

இதையும் படிங்க: தோல் கழலை நோயை கட்டுப்படுத்தவில்லை என ராஜஸ்தான் அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.