ETV Bharat / bharat

ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி.பதவி - நாளைய விவாதத்தில் பங்கேற்கிறார்!

author img

By

Published : Aug 7, 2023, 10:44 AM IST

Updated : Aug 7, 2023, 11:08 AM IST

ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி.பதவி - நாளைய விவாதத்தில் பங்கேற்பு!
ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி.பதவி - நாளைய விவாதத்தில் பங்கேற்பு!

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைக்கப்பட்டதால், மீண்டும் அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டு உள்ளது

டெல்லி: 'மோடி' சமூகத்தினர் மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் கடந்த 4ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளதால், அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். அதுமட்டுமல்லது, இதுதொடர்பாக, மக்களவை செயலகத்திலும் மனு அளிக்கப்பட்டு இருந்தது.

எதிர்கட்சிகள், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை நீக்கம் செய்யும் போது காட்டிய வேகத்தை மத்திய அரசு திரும்ப பெறும் விவகாரத்தில் காட்டவில்லை என்று தொடர்ந்து விமர்சித்து வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தியைக் கண்டு, மத்திய அரசு பயப்படுவதாக, கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ராகுலிடம் இருந்து பறிக்கப்பட்ட எம்.பி. பதவியை, மீண்டும் அவருக்கு வழங்கி, மக்களவை செயலகம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி ஆகி உள்ளார். இதையடுத்து அவர் வயநாடு எம்.பி.யாக தொடர்வார் எனவும் அறிவித்து உள்ளது. நாளை (ஆகஸ்ட் 8ஆம் தேதி), நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள மணிப்பூர் வன்முறை குறித்த விவகாரத்தில், மத்திய அரசு மீது கொண்டு வரப்பட்டு உள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தில், ராகுல் காந்தி பங்கேற்கும் சூழல் உருவாகி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 136 நாட்களுக்கு பிறகு அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்கத்தை எதிர்ப்பவர்கள் வரலாறு அறியாதவர்கள் - குலாம் நபி ஆசாத்

Last Updated :Aug 7, 2023, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.