ETV Bharat / bharat

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

author img

By

Published : Aug 11, 2023, 3:53 PM IST

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

மத்திய சரக்கு மற்றும் சேவை வரிகள் (திருத்தம்) மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் மத்திய நிதியமைச்சர் அறிமுகம் செய்தது உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் நடைபெற்றன.

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி துவங்கியது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள், இன மோதல்கள், இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 10 நாட்களுக்கும் மேலாக முடங்கியது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், அதற்கு, சபாநாயகர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்து விட்டார். இந்த நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை, எதிர்கட்சிகள் கொண்டு வந்தன.

இதனிடையே, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலான, டெல்லி நிர்வாக திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. டெல்லி நிா்வாக திருத்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஆகஸ்ட் 07ஆம் தேதி நீண்ட நேர விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகள், எதிராக 102 வாக்குகள் பெற்றதை அடுத்து மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்தது.

எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம், ஆகஸ்ட் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்த விவாதங்களில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

இதற்கு பதிலளிக்கும் பொருட்டு, பிரதமர் மோடி, ஆகஸ்ட் 10ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். பிரதமர் மோடியின் உரையின் போது, எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், இதுதொடர்பாக குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாக மக்களவை சபாநாயகர் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்னதாக, இன்றே (ஆகஸ்ட் 11ஆம் தேதி) முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தொடரின் இறுதிநாளின் துவக்கத்தில் இரண்டு முறை 2 அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 12.30மணிக்கு மீண்டும் அவை நடவடிக்கைகள் துவங்கின. மாநிலங்களவையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரை பந்தயங்கள் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளின் முழு முக மதிப்பின் மீது 28 சதவீத வரி விதிக்க மத்திய மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டங்களை திருத்துவதற்கான மசோதாக்களை அறிமுகப்படுத்தினார்.

ஆன்லைன் கேமிங் கேசினோக்கள், குதிரைப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்தியாவில் ஜிஎஸ்டி பதிவு பெற வேண்டும். பதிவு மற்றும் வரி செலுத்தும் விதிகளுக்கு இணங்கத் தவறினால், வெளிநாடுகளில் உள்ள ஆன்லைன் கேமிங் தளங்களுக்கான அணுகலைத் தடுப்பதற்கும் இந்தத் திருத்தங்கள் உதவும். என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) சட்டங்களுக்கான திருத்தங்களுக்கு கடந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்து உள்ளது.

மக்களவையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் பாதுகாப்பு குறியீடு மசோதா 2023 உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தினார்..

ஆகஸ்ட் 18ஆம் தேதி உடன் 9 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவு பெற உள்ள நிலையில், அதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 4 பேர் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ள நிலையில், மற்ற 5 பேருக்கு வாழ்த்துகளை , மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர், மக்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி உள்ளிட்டோர் தெரிவித்துக் கொண்டு உள்ளனர். பின்னர் இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான உறுப்பு வன்முறை கொடுமையானது - மணிப்பூர் கமிட்டியின் அறிக்கையை தாக்கல் செய்ய 2 மாத கால அவகாசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.