உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் லோனி நகரில் 'ஜெய் ஸ்ரீராம்', 'வந்தே மாதரம்' என முழக்கமிடாததால் தொழுகை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அப்துல் சமத் என்னும் இஸ்லாமிய முதியவரை காவி உடை அணிந்து வந்த ஐந்து பேர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குக் கண்டனம் தெரிவித்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி, உத்தரப் பிரதேச அரசு சமூக வலைதளங்கள் மீது வழக்குத் தொடர்ந்தது.
இவ்விவகாரம் குறித்து ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் மணிஷ் மகேஷ்வரி நேரில் முன்னிலையாகுமாறு கடந்த ஜூன் 21ஆம் தேதி காசியாபாத் காவல் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கில் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மணிஷ் மகேஷ்வரி மனு தாக்கல்செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதி ஜி. நரேந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "மணிஷ் மகேஷ்வரிக்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
மேலும், அவரது வாக்குமூலத்தைப் பெற வேண்டும் என்றால், வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருக்கும்போது வீடியோ கான்பரன்சிங் மூலம் பெற்றுக்கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாகன சந்தையில் புரட்சி ஏற்படுத்துமா ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்?