ETV Bharat / bharat

Jharkhand illegal coal mine collapse:நிலக்கரி சுரங்க விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு - பொதுமக்கள் போராட்டம்!

author img

By

Published : Jun 9, 2023, 10:18 PM IST

Dhanbad
தன்பாத்

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த தனியார் நிலக்கரி சுரங்கம் சரிந்ததில் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். தனியார் நிலக்கரி சுரங்கம் மீதும், சுரங்க பாதுகாப்பு இயக்குநர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜார்க்கண்ட்: தன்பாத் அருகே உள்ள பவ்ரா கோலியரி என்ற பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் இன்று (ஜூன் 9) காலையில் திடீரென சரிந்து விழுந்தது. இதில், சுரங்கத்தில் பணியிலிருந்து ஊழியர்கள் சிலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதில் ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பவ்ரா காவல் நிலைய ஆய்வாளர் பினோத் ஓரான் கூறுகையில், “சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக வந்து மீட்புப் பணியை தொடங்கினோம்” என்றார்.

உள்ளூர் வாசி ஒருவர் கூறுகையில், “அதிகாரிகள் மற்றும் போலீசார் மிகவும் தாமதமாகவே சம்பவ இடத்துக்கு வந்தனர். நாங்களே சிலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும் வரை நாங்கள் போராட்டம் நடத்துவோம். இப்பகுதியில் பல இடங்களில் சட்டவிரோத சுரங்கங்கள் செயல்படுகின்றன. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை” என்றார்.

இந்த சட்டவிரோத சுரங்கத்தில் நடந்த விபத்துக்கு சுரங்கப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் அலட்சியமே காரணம் எனக்கூறி அப்பகுதி மக்கள், சுரங்க பாதுகாப்பு இயக்குனரகம் முன்பு இறந்தவர்களின் சடலங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டவிரோத சுரங்கத்தை அகற்றக்கோரி பலமுறை கோரியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவுதான் இது என்றும் குற்றம் சாட்டினர். அப்போது, சுரங்க பாதுகாப்பு இயக்குநரகத்தைக் கண்டித்தும், பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்க நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

உள்ளூர்வாசியான சுபோத் குமார் கூறும்போது, “சட்டவிரோத சுரங்கங்களை மூடக் கோரி பலமுறை சுரங்கப் பாதுகாப்பு இயக்குநரகத்திடம் கோரிக்கை விடுத்தோம், ஆனால் நடவடிக்கை இல்லை. இந்த சம்பவத்துக்கு சுரங்க பாதுகாப்பு இயக்குநரகமும், பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கமும்தான் காரணம்.

இது தொடர்பாக சுரங்க பாதுகாப்பு இயக்குனர் மீதும், தனியார் நிலக்கரி சுரங்க நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இப்பகுதியில் உள்ள பலரை அவர்கள் வற்புறுத்தி வேலைக்கு அழைத்துச் செல்கிறார்கள். பெற்றோருக்கு தெரியாமல் சிறுவர்களையும் சுரங்க வேலைக்கு அழைத்துச் செல்கிறார்கள்” என்றார்.

இதையும் படிங்க: Train Accidents: ஜூன் 2 முதல் 9 வரை இந்தியாவில் நிகழ்ந்த ரயில் விபத்துகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.