IND VS NZ 2nd ODI: தொடரை கைப்பற்றியது இந்தியா..!

author img

By

Published : Jan 21, 2023, 7:16 PM IST

இந்தியா

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ராய்பூர்: டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் பிஃன் ஆலென் மற்றும் டிவென் கான்வாய் நியூசிலாந்து அணியின் இன்னிங்சை தொடங்கினர்.

ரன் கணக்கை துவங்குவதற்கு முன்பே நியூசிலாந்து அணி விக்கெட் கணக்கை தொடங்கியது. முகமது ஷமி வீசிய பந்தில் நியூசிலாந்து தொடக்க வீரர் பிஃன் ஆலென் கிளின் போல்டாகி வெளியேறினார். தொடர்ந்து இந்திய வீரர்களின் அசூர வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கான்வாய் 7 ரன், ஹென்றி நிக்கோலஸ் 2 ரன், டேரி மிட்செல், கேப்டன் டாம் லாதம் தலா 1 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் நியூசிலாந்து அணி திண்டாடியது. ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடிய கிளைன் பிலிப்ஸ் மட்டும் 36 ரன்கள் குவித்தார். இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.

இறுதிகட்டத்தில் மைக்கேல் பிரேஸ்வல் (22 ரன்) மிட்செல் சான்டனர் (27 ரன்) ஆகியோரின் உதவியால் நியூசிலாந்து அணி ஒருவழியாக 100 ரன்களை கடந்தது. 34 புள்ளி 3 ஓவர்கள் விளையாடிய நியூசிலாந்து அணி 108 ரன்கள் மட்டும் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் பந்துவீசிய அனைவரும் விக்கெட் அறுவடை செய்தனர்.

அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3 விக்கெட்டுகளை அள்ளினார். ஹர்த்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும் முகமது சீராஜ், முகமது தாக்கூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.

நிதானமாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கடந்த ஆட்டத்தின் நாயகன் சுப்மான் கில், ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக் கோட்டிற்கு அனுப்பினர். நிதானமாக ஆடிய ரோகித் சர்மா(51 ரன்) அரைசதம் அடித்து எல்பிடபிள்யூ ஆனார். இந்திய அணி 20புள்ளி 1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருது முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஒருநாள் தொடரை இந்திய அணி 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூர் மைதானத்தில் வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையும் படிங்க: நேரலையில் ஆபாச முனங்கல் சப்தம்.. மன்னிப்பு கேட்ட பிபிசி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.