ETV Bharat / bharat

உணவக ஊழியர்கள் மீது தாக்குதல்: ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்!

author img

By

Published : Jun 15, 2023, 12:07 PM IST

ராஜஸ்தானில் நள்ளிரவில் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டு ஊழியர்களை தாக்கியதாக ஒரு ஐஏஎஸ் அதிகாரி, ஒரு காவல்துறை அதிகாரி உள்பட ஐந்து அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உணவக ஊழியர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

suspended
உணவக

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கடந்த 11ஆம் தேதி இரவு, விருந்துக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில், கழிவறையைப் பயன்படுத்துவதற்காகவும், சற்று இளைப்பாறுவதற்காகவும் அஜ்மீரில் நெடுஞ்சாலை அருகே இருந்த உணவகம் ஒன்றில் வாகனத்தை நிறுத்தினர்.

அப்போது உணவகத்தில் இருந்த ஊழியர்களை அழைத்து கழிவறையைத் திறக்கும்படியும், தங்களுக்கு உணவு வழங்கும்படியும் வற்புறுத்தியுள்ளனர். உணவகம் மூடப்பட்டுவிட்டதாக ஊழியர்கள் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த அதிகாரிகள் உணவக ஊழியர்களை தாக்கியுள்ளனர். ஊழியர்கள் பயந்து ஓடியபோதும் அவர்களை விரட்டிச் சென்று தாக்கியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக உணவக உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், காவல்துறை அதிகாரிகள் சிலர் தங்களது உணவகத்திற்குள் புகுந்து தகராறு செய்ததாகவும், ஊழியர்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல், அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே காவல்துறை அதிகாரிகள் உணவக ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோவை பகிர்ந்த பலரும், தகராறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், உணவகத்தில் ஊழியர்களை தாக்கியவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதில் ஒருவர் அஜ்மீர் மேம்பாட்டு ஆணையத் தலைவராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி கிரிதர். மற்றொருவர், கங்காபூர் நகர காவல்துறையில் சிறப்புப் பணியில் உள்ள அதிகாரி சுஷில்குமார் பிஷ்னோய். மற்றவர்கள் கிராம கணக்காளர் நரேந்திர சிங் தஹியா, காவலர் முகேஷ் குமார் மற்றும் எழுத்தர் ஹனுமன் பிரசாத் சவுத்ரி என தெரியவந்துள்ளது.

வீடியோ வைரலான நிலையில், இவர்கள் ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல், 5 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக காவல்துறை கூடுதல் இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி உமேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுஷில்குமார் பிஷ்னோய், உணவக ஊழியர்கள் தங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர்களது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், உணவகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும் தாங்கள் சென்று தீர்த்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Ghaziabad conversion case: ஆன்லைன் கேம் மூலம் மதமாற்றம் - கைதான நபரின் செல்போனில் 30 பாக்., எண்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.