ETV Bharat / bharat

பாஜகவின் தலையெழுத்து.. காங்கிரஸின் கடைசி வாய்ப்பு.. வெல்லப்போவது யார்?

author img

By

Published : Dec 7, 2022, 8:25 PM IST

Updated : Dec 8, 2022, 7:52 AM IST

பாஜகவின் தலையெழுத்து... காங்கிரஸின் கடைசி வாய்ப்பு... வெல்லப்போவது யார்..?
பாஜகவின் தலையெழுத்து... காங்கிரஸின் கடைசி வாய்ப்பு... வெல்லப்போவது யார்..?

குஜராத் மற்றும் ஹிமாச்சலப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. இந்த முடிவுகளைப் பொறுத்தே 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் என்று தேர்தல் வியூகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஹைதராபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 182 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை (டிசம்பர் 8) காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. மொத்தமாக 33 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணப்படுகிறது. அதேபோல, ஹிமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 59 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்படுகின்றன. குஜராத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இருமுனை போட்டியாக இருந்த தேர்தல், ஆம் ஆத்மியின் வருகையால் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. இந்த ஆம் ஆத்மி டெல்லி மாநகராட்சி தேர்தலில் கண்ட வெற்றியின் சுவையை குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் ருசி பார்க்க ஆர்வம் காட்டுகிறது.

பாஜக-காங்கிரஸ்-ஆம் ஆத்மி: குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று சுட்டிக்காட்டுகின்றன. இந்த கணிப்புகள் போலவே வெற்றி பெற்றால், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பாஜகவிற்கு வெற்றி கிட்டும் என்று அக்கட்சி நினைக்கிறது. இந்த கணக்கை பிரதமர் மோடி 3 மாதங்களுக்கு முன்பே போட்டுவிட்டார் என்றே சொல்லலாம். குஜராத் தேர்தல் பரப்புரையை 2 மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்தார், பிரதமர் மோடி. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரசேத முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் உள்ளிட்டோரையும், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தினார். இப்படி ஒட்டுமொத்த பாஜக முகங்கள் தேர்தல் பணியில் குவிந்திருக்க காங்கிரஸ் மௌனம் மட்டுமே காத்துவந்தது. காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் மட்டுமே பங்கேற்றனர்.

இதனால் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மட்டுமே பரப்புரைக்குத் தலைமை தாங்கினார். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜூன கார்கேவும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றினார். இந்த பரப்புரை காங்கிரஸ் வாக்கு வங்கிகளை மட்டுமே கவர்ந்தது, நடுநிலையான வாக்காளர்களைப் பெரிதும் கவரும் வகையில் இல்லை. சொல்லப்போனால் காங்கிரஸ் வெற்றிபெறும் நோக்கில் தேர்தல் பணிகளை செய்யவில்லை. மோசமான தோல்வியைச் சந்திக்காமல் கணிசமான வெற்றியைப் பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்தியது. மறுபுறம் புதிய போட்டியாளரான ஆம் ஆத்மி தீவிர பரப்புரையை மேற்கொண்டது. பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து தன்னை மூன்றாவது பெரிய கட்சியாக நிலைநிறுத்திக் கொள்ளவும், காங்கிரஸ் இடத்தைப் பிடிக்கவும் முயற்சி செய்துவருகிறது, ஆம் ஆத்மி.

டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியை விட ஒருபடி மேலே சென்று 5 மாதங்களுக்கு முன்பாகவே குஜராத்தில் தேர்தல் பரப்புரை கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தத் தொடங்கினார். குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது.

மொத்தமாக 66.31 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. ஆனால், 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 71.28 விழுக்காடாகும். இந்த வாக்குப்பதிவின் பின்னடைவு பாஜகவுக்கு எதிர்ப்பு அலை இல்லை என்பதை காட்டுவதாக பாஜக தரப்பு தெரிவிக்கிறது. கடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் தொகுதிகளில் வெற்றி பெற்ற 20 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு கட்சி மாறிவிட்டனர். இதனாலேயே காங்கிரஸ் கிடைக்கும் தொகுதிகளே போதும், வெற்றி பெற்றாலும் சிலர் கட்சி மாறிவிடுவர் என்று மந்தமாக தேர்தல் பணிகளை செய்தது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவின் எண்ணம்: ஹிமாச்சலப் பிரதேச வாக்காளர்கள் எந்த கட்சியையும் 2 முறை தொடர்ந்து வெற்றி பெற வைத்துவிடவில்லை. 1985ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் எந்த கட்சியும் 2ஆவது முறையாக வெற்றி பெறவில்லை. இந்த வரலாற்றை மாற்ற பாஜக முயற்சித்துவருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளன. இதனால் பாஜக உற்சாகத்தில் உள்ளது. ஆனால், மக்கள் சக்தி யார் பக்கம் இருக்கிறது என்பதை பொறுத்தே வெற்றி அமையும். இந்த மாநிலத்தில் பெண்களின் வாக்கு வங்கி வெற்றியை தீர்மானிக்க வாய்ப்புள்ளது. இதனாலேயே பாஜக பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது கவனம் செலுத்தி திட்டங்களை அறிவித்துவருகிறது. ஏனென்றால், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் தேர்தல்களில் பாஜக பெண் வாக்கு வங்கியின் பலத்தாலேயே வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சிக்கு கடைசி வாய்ப்பு: நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பழைய ஓய்வூதியத் திட்டம், வாழ்வாதார சவால்கள் அடிப்படையில் வாக்காளர்கள் முடிவெடுக்க வாக்காளர்களை தூண்டுவதில் காங்கிரஸ் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. இதுவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கியை ஏற்படுத்தித் தரும் என்பது அக்கட்சித் தலைவர்களின் கணக்காக உள்ளது.

இந்த தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றால் காங்கிரஸ் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும். ஏனெற்றால் ஆம் ஆத்மி போன்ற புதிய கட்சிகள் வந்து பழம்பெரும் கட்சியை பின்னுக்குத் தள்ளினால், அதன் விளைவு காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தையே அழித்துவிடும். ஆகவே, கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் காங்கிரஸ் நிலைமை உள்ளது.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த எண்ணிக்கையை ஆம் ஆத்மியும் பிடித்துவிட்டது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் 2017ஆம் ஆண்டு தேர்தலின்போது பாஜக 44 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. இங்கும் பாஜக பலமாகவே தன்னை காட்டிவருகிறது. இந்த முடிவுகளைப் பொறுத்தே 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும்.

இதையும் படிங்க: 'ஜி 20 மாநாட்டின் மூலம் இந்தியா உலகளவில் மிளிரும்..!' - அமைச்சர் ஜெய்சங்கர்

Last Updated :Dec 8, 2022, 7:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.