ETV Bharat / bharat

"அம்பேத்கரும் மோடியும்" நூல் வெளியீடு

author img

By

Published : Sep 16, 2022, 7:12 PM IST

Updated : Sep 16, 2022, 7:24 PM IST

Former President Ram Nath Kovind launches book Ambedkar and Modi
Former President Ram Nath Kovind launches book Ambedkar and Modi

‘அம்பேத்கரும் மோடியும்: சீர்திருத்தவாதியின் சிந்தனைகளும் செயற்பாட்டாளரின் அமலாக்கமும்’ என்ற நூலினை முன்னாள் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் வெளியிட்டார்.

டெல்லி: ‘அம்பேத்கரும் மோடியும்: சீர்திருத்தவாதியின் சிந்தனைகளும் செயற்பாட்டாளரின் அமலாக்கமும்’ என்ற நூலினை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே ஜி பாலகிருஷ்ணன், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன், ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் இயக்குநர் ஹித்தேஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று (செப் 16) வெளியிட்டார்.

அப்போது உரையாற்றிய அனுராக் தாக்கூர், இந்த நூல் மாபெரும் சீர்திருத்தவாதியான பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கரின் சிறந்த சிந்தனைகள், கண்ணோட்டங்களின் தொகுப்பு மட்டுமல்ல. இவற்றை கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு செயல்படுத்தினார் என்பதற்கான தொகுப்பாகவும் உள்ளது. அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் முயற்சிகளில் ஆவணமாக உள்ளது.

நாட்டின் முதலாவது சட்டத்துறை அமைச்சரான அம்பேத்கர், பாகுபாடு இல்லாத சமூகத்தை, நலிந்தவர்களை மைய நீரோட்டத்திற்கு கொண்டுவருவதை வளர்ச்சியின் பயன்கள் சமமாக அனைவருக்கும் வழங்கப்படுவதை தமது பார்வையாக கொண்டிருந்தார். ஆனால், சுதந்திரத்திற்கு பிந்தைய அரசுகளின் முயற்சிகள், இந்த சிந்தனைகளை நிறைவேற்ற தவறிவிட்டன. 2014ஆம் ஆண்டுக்கு பிறகான அரசு இந்த நோக்கங்களை உறுதியாக பின்பற்றி வருகிறது என்று தெரிவித்தார்

அதன்பின் பேசிய முன்னாள் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த், பாபா சாஹேபின் பங்களிப்புகள் வங்கி, பாசனம், மின்சாரம், கல்வி, தொழிலாளர் நிர்வாகம், வருவாய் பகிர்வு முறை போன்றவை தொடர்பான கொள்கைகளை வடிவமைக்க உதவின. 2010ஆம் ஆண்டு குஜராத்தில் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி இந்திய அரசியல் சட்டத்தின் மிகப்பெரிய பிரதி ஒன்றை அலங்கரிக்கப்பட்ட யானையின் மேல் வைத்து மக்களுடன் நடந்தே சென்றார். அரசியல் சட்டத்தின் மீதும், பாபா சாஹேப் அம்பேத்கர் மீதும் அவருக்கு இருந்த மதிப்பை விளக்குவதற்கு வேறு உதாரணம் தேவையில்லை என்றார்.

அம்பேத்கரும் மோடியும் நூலைப் பற்றி: சமூக நலனுக்காக சிறந்த சிந்தனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அமலாக்கம் செய்யவும் முன்னணி அமைப்புகளில் ஒன்றான ப்ளூகிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் இந்த நூலினை தொகுத்துள்ளது. இதற்கு பிரபல இசையமைப்பாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா முன்னுரை வழங்கியுள்ளார். அம்பேத்கரின் பார்வையில், இந்தியாவின் முன்னேற்றத்தை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடியால் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளையும் இணைத்து எழுதப்பட்டுள்ளது. இளையராஜாவின் அணிந்துரைக்கு எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவின் பொருளாதாரம் இந்தாண்டு 7.5 சதவீதமாக வளர்ச்சியடையும் - பிரதமர் மோடி

Last Updated :Sep 16, 2022, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.