ETV Bharat / bharat

உக்ரைனிலிருந்து இந்தியா வந்தடைந்த முதல் விமானம்!

author img

By

Published : Feb 26, 2022, 10:16 PM IST

Updated : Feb 26, 2022, 10:54 PM IST

உக்ரைன்
உக்ரைன்

உக்ரைனிலிருந்து வெளியேறிய முதல் விமானம் 219 மாணவர்களுடன் மகாராஷ்டிராவின் மும்பை நகரை வந்தடைந்தது.

மும்பை: நேட்டோவுடன் இணைவதைக் கைவிடுமாறு ரஷ்யா எச்சரிக்கைவிடுத்திருந்த நிலையில், இதனை உக்ரைன் ஏற்க மறுத்தது. இதையடுத்து, உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து முன்னேறிவரும் ரஷ்யா பலமுனைத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்வை நெருங்கியுள்ளது. ஓரிரு நாளில் அந்நகரைக் கைப்பற்றும் என அமெரிக்கா கணித்துள்ளது. இச்சூழலில் எப்போது மரணம் சம்பவிக்குமோ என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் இருந்துவருகின்றனர்.

லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள், மாணவர்கள், குழந்தைகள் என பதுங்குக் குழிகள், சுரங்கங்கள், சுரங்கப்பாதைகளில் தஞ்சம்புகுந்துள்ளனர். இணைய வசதி, மின் இணைப்பு ஆகியவை பெரும்பாலான இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள இந்தியர்கள் பலர் அண்டை நாடு வந்தவண்ணம் உள்ளனர். மேலும் பலர் உக்ரைனிலேயே சிக்கிக் கொண்டனர். போரை நிறுத்துமாறு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யாவிடம் கோரிக்கைவிடுத்துள்ளன. இருப்பினும் எவற்றிற்கும் மயங்காத ரஷ்யா தனது நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.

இந்த நிலையில், உக்ரைனிலிருந்து வெளியேறிய முதல் விமானம் 219 பயணிகளுடன் இன்று மும்பை விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானம் மதியம் ரோமானியா தலைநகர் புக்காரெஸ்ட்டிலிருந்து கிளம்பியது. தாயகம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் வரவேற்றார்.

விமான நிலையத்தில் செய்தியாளரைச் சந்தித்த பியூஷ் கோயல், "இந்தப் பதற்றம் தொடங்கியதிலிருந்தே உக்ரைனில் உள்ள ஒவ்வொரு இந்தியரையும் தாயகம் அழைத்துவருவதே எங்களுடைய முதன்மையாக நோக்கமாக இருந்தது. தற்போது 219 மாணவர்கள் இங்கு வந்தடைந்தனர். இது முதல் விமானம் (ஃபர்ஸ்ட் பேட்ச்), இரண்டாம் விமானம் டெல்லியை விரைவில் வந்தடையும்.

அனைத்து மக்களும் தங்களது வீடு அடையும்வரை இந்த நடவடிக்கையை நிறுத்தமாட்டோம்" என்றார். இது குறித்து பியூஷ்கோயல் அவரது ட்வீட்டில், "முதல் விமானம் வந்தடைந்தது. இரண்டாவது விமானம் நாளை டெல்லியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் எல்லையில் உள்ள நமது மாணவச் செல்வங்களை அழைத்துவருவதற்கான பணியை நாங்கள் செய்துவருகிறோம். இந்தியத் தூதரக அலுவலர்களை அவர்களை எல்லையிலிருந்து மீட்டு அண்டை நாடுகளின் விமான நிலையத்திற்கு அழைத்து வந்துகொண்டிருக்கின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனிலிருந்து வந்தடைந்த முதல் பேட்ஜ் மாணவர்களை வரவேற்பதாக ட்விட்டரில் குறிப்பிட்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டாவது விமானம் ரோமானியா தலைநகர் புக்காரெஸ்ட்டிலிருந்து 250 இந்தியர்களுடன் டெல்லி வந்தடையவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: விமானப் போர் ஒத்திகையிலிருந்து விலகிய இந்தியா

Last Updated :Feb 26, 2022, 10:54 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.