ஷியாபூர்: இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப் புலிகள் இனத்தைக் கொண்டு வரும் விதமாக கடந்த ஆண்டு நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து 5 பெண், 3 ஆண் சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. மேலும் கடந்த பிப்ரவரி மாதம், 18ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் மேலும் 12 சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி தனது 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகளை மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டார். இந்நிலையில், குனோ தேசியப் பூங்காவில் பெண் சிவிங்கிப் புலி ஒன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஷாஷா, உதய் ஆகிய இரண்டு சிவிங்கிப் புலிகள் உயிரிழந்த நிலையில், தற்போது பெண் சிவிங்கிப் புலியும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இனப்பெருக்கத்திற்காக ஆண் சிவிங்கிப் புலிகள் இருக்கும் பகுதியில் பெண் சிங்கிப் புலி திறந்துவிடப்பட்டது.
இதில் ஆண் சிவிங்கிப் புலிகள் இனச்சேர்க்கையில் ஈடுபட்டபோது, பெண் சிவிங்கிப் புலி படுகாயம் அடைந்ததாகவும், வனத்துறை ஊழியர்கள் இதை கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வந்தபோதிலும், சிகிச்சைப் பலனின்றி பெண் சிவிங்கிப் புலி உயிரிழந்ததாகவும் பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெண் சிவிங்கிபுலி உயிரிழந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, "இனப்பெருக்கத்திற்காக ஆண் சிவிங்கிப் புலிகள் பகுதியில் திறந்துவிடப்பட்ட காயமடைந்த நிலையில் காணப்பட்டது. பூங்கா அதிகாரிகள் தொடர்ந்து பெண் சிவிங்கிப்புலி உடல் நிலையைக் கண்காணித்து வந்தனர். அதற்குத் தேவையான மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இருப்பினும், மதியம் 12 மணியளவில் பெண் சிவிங்கிப் புலி உயிரிழந்தது" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பூங்காவில் உள்ள மற்ற சிவங்கிப் புலிகள் பாதுகாப்பாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற சிவிங்கிப் புலிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவை நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் தனக்குத் தேவையான உணவுகளை தானே வேட்டையாடி சாப்பிடுவதாகவும் வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : Karnataka Election: 'தன்னைப்பற்றிய வைரல் கடிதம்; பாஜகவின் சதிச்செயல்!' - சித்தராமையா குற்றச்சாட்டு!