ETV Bharat / bharat

தெலங்கானாவில் மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2023, 7:12 PM IST

Etv Bharat
Etv Bharat

Life imprisonment to father in Telangana: தெலங்கானா மாநிலத்தில் தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ராஜேந்திரநகரில் வசித்து வரும் 35 வயதான நபர் இடுகாட்டில் வேலை செய்பவர். இவருக்கு, ஒரு ஆண் பிள்ளையும், இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். மனைவி இறந்த நிலையில் மூன்று பிள்ளைகளையும் இவர் வளர்த்து வந்தார். இதில், ஆண் பிள்ளை மற்றும் 13 வயது பெண் பிள்ளை இருவரும் அரசு விடுதியில் தங்கி படித்து வந்தனர். இளைய மகள் மட்டும் வீட்டில் இருந்தபடி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

2021ஆம் ஆண்டு கரோனா காலக்கட்டத்தில் அரசு விடுதி மூடப்பட்டதால் 13 வயது சிறுமி தனது வீட்டிற்குச் சென்று தங்கியிருக்கிறார். அப்போது, இரவு நேரத்தில் தனது மூத்த மகளை தந்தை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். தொடர்ந்து இதேபோல் பல நாள்கள் பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். இது குறித்து வெளியில் கூறினாள் கொலை செய்து விடுவதாக மிரட்டியிருக்கிறார்.

ஒரு நாள் சிறுமிக்கு பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, நடந்தவற்றை தனது சகோதரியிடம் சிறுமி கூறியுள்ளார். தொடர்ந்து, மறுநாள் இது குறித்து அவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், சிறுமிகளை தனது வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டார்.

இதனையறிந்த சிறுமிகளின் தந்தை, மின்சார ஒயர்களைக் கொண்டு சிறுமிகளை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இந்த விவகாரம் அப்பகுதி மக்களுக்குத் தெரிய வர, இரண்டு சிறுமிகளையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றனர். அங்கு, 13 வயது சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை கூறி உள்ளார்.

தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், 2021ஆம் ஆண்டு செப்.11ஆம் தேதி சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தற்போது நடந்த இந்த வழக்கு விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபாயும், அவரது சகோதரிக்கு 5 லட்சம் ரூபாயும் அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த விஜய் ரசிகர்கள் - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.