ETV Bharat / bharat

“2ஜி வழக்கு கூட இவ்வளவு காலம் நடந்ததில்லை” - அமலாக்கத்துறையால் நோட்டீஸ் பெற்ற கவிதா பேட்டி!

author img

By PTI

Published : Sep 14, 2023, 8:21 PM IST

ED sent notice to BRS MLC Kavitha: டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக நாளை ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை தெலங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத் (தெலங்கானா): கடந்த 2021 - 2022 நிதியாண்டில் டெல்லி அரசால் கொண்டு வரப்பட்ட கலால் கொள்கையில் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. அதிலும், சில மதுபான வர்த்தகர்களுக்கு உரிமம் அளித்தது மற்றுல் சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. ஆனால், இதனை டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி கடுமையாக மறுத்தது. மேலும், இந்த கொள்கை டெல்லி அரசால் கைவிடப்பட்டது.

அதேநேரம், சிபிஐ இது குறித்து விசாரிக்க வேண்டும் என டெல்லி துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து, இது தொடர்பாக பணப் பரிவர்த்தனை மோசடி பிரிவின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளும், பிஆர்எஸ் எம்எல்சியுமான கவிதாவின் கணக்காளராக கருதப்படும் புஜ்ஜிபாபு அளித்த வாக்குமூலத்தின்படி, கவிதா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிஷோடியா ஆகியோருக்கு இடையே அரசியல் புரிந்துணர்வு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

ஆனால், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், மத்திய பாஜக அரசின் கீழ் உள்ள அமலாக்கத்துறை மூலம் தெலங்கானாவில் பின்புறம் வழியாக பாஜக நுழைய முயற்சிப்பதாக கவிதா கூறி இருந்தார். இந்த நிலையில், கவிதா மீது உள்ள பல்வேறு வழக்குகள் தொடர்பாக நாளை (செப் 15) நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில், நிஜாமாபாத்தில் வைத்து கவிதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய கவிதா, “தேர்தல் நடைபெறும் எந்த மாநிலத்திலும் மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துவதையே பாஜகவின் செயல்பாடாக இருந்து வருகிறது. தெலங்கானாவில் தேர்தல் வர உள்ளதால், அதே செயல்பாட்டை இங்கும் பாஜக பயன்படுத்துகிறது. அமலாக்கத் துறையிடம் இருந்து நோட்டீஸ் பெற்று உள்ளேன்.

நாங்கள் இதனை கட்சியின் சட்டப் பிரிவு மூலம் எதிர்கொள்வோம். அவர்களின் அறிவுறுத்தலின்படி செல்வோம். இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்ட நோட்டீஸ் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். முடிவில்லா தொலைக்காட்சித் தொடர் போன்றுதான் அமலாக்கத் துறையின் விசாரணை உள்ளது.

துரதிர்ஷ்டவசமாக கடந்த ஒரு வருடமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இது இன்னும் எத்தனை காலங்களுக்குச் செல்லும் என எனக்கு தெரியவில்லை. 2ஜி வழக்கு கூட இத்தனை காலம் சென்றதில்லை என நான் நினைக்கிறேன். பிஆர்எஸ் கட்சி எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பி டீம் அல்ல. பிஆர்எஸ் நாடு மற்றும் தெலங்கானா மக்களின் ஏ டீம் மட்டுமே. பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 47 கட்சித் தலைவர்களுக்கு கவிதா கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.