அதிகரித்து வரும் கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள், அதனால் நிரம்பி வழியும் தகன மேடைகளால் நாட்டின் சுகாதார அமைப்பு மோசமடைந்துள்ளதை வெளிச்சமிட்டு காட்டுகிறது. சில மருத்துவமனைகளில் ஒரு படுக்கையில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகள் சிகிச்சை பெறும் அவலம் தொடர்கிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கரோனா காரணமாக அதிகரிக்கும் உயிரிழப்புகளால், தகன மேடைகளில் சடலங்களை எரியூட்ட இடமின்றி, ஆம்புலன்ஸ்கள் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இங்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 300 சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. இதனால் மயானத்தின் அருகாமையில் உள்ள இடங்களில் புகைமூட்டமாகவே இருப்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
மயானங்களில் எரியூட்ட வேண்டிய சடலங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சூழலில், நகரத்திற்கு வெளியே உள்ள கிரானைட் குவாரிகள் அடையாளம் காணப்பட்டு, அவை தற்போது கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்கும் தகன மேடைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கரோனா பரவலைத் தடுக்க அம்மாநில அரசு நேற்று (மே.10) முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.