இந்திய பால்வளத் துறையின் மதிப்பு 8.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்

author img

By

Published : Sep 12, 2022, 7:43 PM IST

Etv Bharat பிரதமர் நரேந்திர மோடி
Etv Bharat பிரதமர் நரேந்திர மோடி ()

நாட்டில் 8.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பால்வளத் துறையின் உற்பத்தி, கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியின் இணைந்த மதிப்பை விட அதிகமாகும், இந்த துறை 8 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நொய்டா: உத்தரப் பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் இந்திய எக்ஸ்போ மையம் மற்றும் மார்ட் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச பால்வள கூட்டமைப்பின் உலக பால்வள உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 12) தொடங்கிவைத்தார். அதன்பின் உரையாற்றிய அவர், "பால்வளத் துறையின் திறன் என்பது ஊரக பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது மட்டுமின்றி, உலக முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு மிகப்பெரும் வாழ்வாதாரமாகவும் உள்ளது.

இந்திய பால்வளத் துறையின் குணாம்சம் என்பது ‘பெருமளவு உற்பத்தி’ என்பதை விட ‘மக்களால் உற்பத்தி’ என்று உள்ளது. ஒன்று, இரண்டு அல்லது மூன்று கால்நடைகளுடன் சிறு விவசாயிகளின் முயற்சியின் அடிப்படையில், இந்தியா மிகப்பெரும் பால் உற்பத்தி நாடாக விளங்குகிறது. இந்த துறை நாட்டில் 8 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. நாட்டில் உள்ள 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்த 2 கோடி விவசாயிகளிடமிருந்து ஒவ்வொரு நாளும் 2 முறை பாலினை கொள்முதல் செய்யும் பால் கூட்டுறவுகள் அதனை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்கின்றன. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தில் 70 சதவீதத்திற்கும் கூடுதலாக விவசாயிகளுக்கு நேரடியாக செல்கிறது.

இதுபோன்று வேறு எந்த நாட்டிலும் இல்லை. இந்திய பால்வளத்துறை தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்திய பால் கூட்டுறவுகளின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் பெண்களே. 8.5 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பால்வளத் துறையின் உற்பத்தி, கோதுமை மற்றும் அரிசி உற்பத்தியின் இணைந்த மதிப்பை விட அதிகமாகும். இவை அனைத்தையும் இயக்குவது இந்திய பெண்கள் சக்தியாகும்.

இந்தியா, 2014-ல் 146 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது. இது தற்போது 210 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதாவது சுமார் 44 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக அளவிலான வளர்ச்சி 2 சதவீதமாக உள்ளதற்கு மாறாக, இந்திய பால் உற்பத்தியின் அதிகரிப்பு விகிதம் 6 சதவீதமாக உள்ளது. விவசாயிகளின் வருவாயை பாதிப்பதில் பெரும் பிரச்சனையான கால்நடை நோய்கள். இது கால்நடையின் திறனை பாதிப்பதோடு, பாலின் தரம் மற்றும் தொடர்புடைய பொருட்களையும் பாதிக்கிறது.

2025-க்குள் 100 சதவீத கால்நடைகளுக்கு கோமாரி மற்றும் புருசெலோசீஸ் தடுப்பூசி செலுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். அண்மைக் காலத்தில் லும்பி எனப்படும் நோய் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில் கால்நடைகளின் இழப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. நமது விஞ்ஞானிகள் லும்பி எனும் தோல் கட்டி நோய்க்கும் உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்துள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்த கால்நடைகளின் நடமாட்டத்தை கண்டறிவதற்கான, நடைமுறையை உருவாக்கும் முயற்சிகளும் செய்யப்பட்டுவருகின்றன எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய கடற்படையில் ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் பி17ஏ ரக போர்க்கப்பல் அறிமுகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.