ETV Bharat / bharat

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்... காரணத்தை கேட்ட மணமகன் ஷாக்...!

author img

By

Published : May 17, 2023, 9:49 PM IST

பீகாரில் மணமகன் வயது முதிர்ந்தவராகவும், கருப்பாகவும் இருப்பதாகக் கூறி மணப்பெண் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

bride
bride

பீகார்: மணமகன் கருப்பாகவும் வயது முதிர்ந்தவராகவும் இருப்பதாகவும் கூறி தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மணப்பென் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பீகாரில் அரங்கேறி உள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் ரசல்பூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் மண்டல் என்பவரது மகள் கிட்டு குமாரிக்கும், தனோரா பகுதியைச் சேர்ந்த வீரேந்திர சிங்கின் மகன் நிலேஷ் குமார் சிங்கிற்கும் திருமணம் நடைபெறவிருந்தது. பூரண அலங்காரத்துடன் மணமக்கள் மேடையில் அமர்ந்திருந்த நிலையில், திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அந்த மகிழ்ச்சியான தருணங்களை இரு வீட்டாரும் வீடியோவாகவும் புகைப்படமாகவும் பதிவு செய்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து, மணமகளும் மணமகனும் மாலை மாற்றும்படி பெரியோர்கள் அறிவுறுத்தினர். அப்போது, திடீரென மணமகனை திருமணம் செய்து கொள்ள முடியாது என மணமகள் கிட்டு குமாரி மறுத்துவிட்டார். இதைக் கேட்டு, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அந்த பெண்ணை சமாதானப்படுத்தி, மாப்பிள்ளையின் கழுத்தில் மாலையைப் போடும்படி வற்புறுத்தினர்.

ஆனால், அந்த மணப்பெண் மாப்பிள்ளைக்கு மாலையிடவும், நெற்றியில் திலகம் இடவும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதையடுத்து, திருமணம் செய்ய மறுப்பதற்கான காரணம் குறித்து உறவினர்கள் கேட்டனர். அப்போது, மணமகன் தன்னை விட மிகவும் வயது முதிர்ந்தவராக இருப்பதாலும், கருப்பாக இருப்பதாலும் அவரை திருமணம் செய்ய தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு, கோபத்துடன் மணப்பெண் மேடையிலிருந்து இறங்கி தனது அறைக்கு சென்றுவிட்டார். பின்னர், மணமகனின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ளும்படி மணமகளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். திருமணம் நின்றுவிட்டால், தங்களது குடும்பத்திற்கு மிகவும் அவமானமாகிவிடும் என்றும் கூறி சமாதானப்படுத்த முயன்றனர்.

பெண்ணின் உறவினர்களும் பல்வேறு பொய்களைச் சொல்லியும், திட்டியும் சம்மதிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால், அந்த மணப்பெண் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல், தனது முடிவில் உறுதியாக இருந்துவிட்டார். இதனால் திருமணம் நின்றுவிட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் வெளிரிப்போன முகத்துடன் இருக்கும் மணப்பெண்ணை, அவரை சுற்றியுள்ளவர்கள் கடுமையாக திட்டுகிறார்கள். திருமணம் செய்து கொள்ளும்படி கோபமாக அறிவுறுத்துகிறார்கள். இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சில பெற்றோர் இது போன்ற விருப்பமில்லாத பெண்களை வற்புறுத்தி திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள் என்றும், தற்போது மண மேடை வரை சென்றாலும் பெண்கள் தைரியமாக மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்றும் கருத்து கூறுகின்றனர். அதேபோல், சில பெண்கள் மிகவும் அர்த்தமற்ற காரணங்களுக்காக திருமணத்தை நிறுத்துகிறார்கள் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒருதலைக்காதல் விவகாரம்: பெண்ணின் கண்களை ஆட்டோவில் வரைந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்திய பெண் வீட்டார் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.