ETV Bharat / bharat

மருத்துவமனையில் சிகிச்சை பெற வரவர ராவுக்கு அனுமதி!

author img

By

Published : Nov 18, 2020, 6:15 PM IST

Updated : Nov 18, 2020, 6:56 PM IST

Bombay HC
Bombay HC

மும்பை: பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சமூக செயற்பாட்டாளரும் கவிஞருமான வரவர ராவ், நானவதி மருத்துவமனையில் 15 நாள்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ள மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2017, டிசம்பர் 31ஆம் தேதி, எல்கர் பரிஷத் அமைப்பு சார்பாக ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கில், வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக வரவர ராவ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். பீமா கோரேகான் பகுதியில் நடைபெற்ற வன்முறைக்குக் காரணம் இவர்களின் பேச்சுதான் எனவும், காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டது.

இதற்கிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். குணமடைந்ததைத் தொடர்ந்து, அவர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், மீண்டும் அவரின் உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில், வரவர ராவ், நானவதி மருத்துவமனையில் 15 நாள்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ள மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவமனை விதிகளை பின்பற்றி வரவர ராவின் குடும்பத்தினர் அவரை பார்த்துக் கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீதிபதிகள் எஸ்.எஸ். சிண்டே, மாதவ் ஜாம்தார் ஆகியோர் கொண்ட அமர்வு இதுகுறித்த வழக்கை டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. வரவர ராவின் மருத்துவ அறிக்கையை அந்த நாளே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திடம் தெரிவிக்காமல் அவரை விடுவிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Last Updated :Nov 18, 2020, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.