புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி மூலக்குளம் மதுபானக் கடை அருகே ஊர்க்காவல் படையைச் சேர்ந்த காவலர் அசோக் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு நகர முற்பட்டார். அப்போது அவரை காவலர் அசோக் தடுத்துள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த நபர், தானும் காவலர் தான் என்று கூறியுள்ளார். பின்னர், தனது அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார்.
அதில், கோரிமேடு காவலர் குடியிருப்பில் வசித்து வரும் அரவிந்தன் என்பது அவர் தற்போது விடுப்பில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்களுக்கு ஒரு சட்டம் காவலருக்கு ஒரு சட்டமா என அரவிந்திடம் காவலர் அசோக் கேட்டுள்ளார்.
இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர், நடு ரோட்டில் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவத்தை அங்கிருந்த ஒருவர், தனது செல்ஃபோனில் பதிவு செய்து வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் பணியில் இருந்த காவலர் அசோக், தன்னை அரவிந்தன் தாக்கியதாக ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அரவிந்தனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கருணை காட்டாத காவலர்கள்... ஒரு கி.மீ. தூரம் தந்தையை தோளில் சுமந்த மகன்