கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாகp பரவிவருகிறது. இதுவரை, இந்த நோயால் 170 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேவஸ்தானம் போர்டு தலைவர் சுப்பா ரெட்டி, "மகாராஷ்டிராவிலிருந்து கோயிலுக்கு வந்த ஒரு நபருக்கு காய்ச்சல், இருமல் இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த சில நாள்களாக, கோயிலுக்கு வர வேண்டாம் எனப் பக்தர்களை கேட்டுக் கொண்டோம்.
ஆனால், தற்போது நிலைமை மோசமாகியதைத் தொடர்ந்து, கோயிலை மூடுகிறோம். திட்டமிட்டப்படி தினசரி பூஜைகள் நடத்தப்படும்" என்றார்.
பல மாநிலங்களில் கல்வி நிலையங்கள், திரையரங்குகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டது. வெளிநாட்டுப் பயணிகள் விமானம் இந்தியாவில் நுழையத் தடை விதித்தும் 65 வயதைத் தாண்டிய முதியவர்கள் வீட்டிலேயே இருக்கும்படியும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன.
இதையும் படிங்க: மார்ச் 22ஆம் தேதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் - பிரதமர் மோடி வேண்டுகோள்!