ETV Bharat / bharat

ஒற்றைக்கருத்தை நோக்கிச் செல்லும் நாட்டை மாற்றும் கடமை அனைவருக்குமானது - கனிமொழி

author img

By

Published : Mar 3, 2020, 8:06 AM IST

Updated : Mar 3, 2020, 9:23 AM IST

Kanimozhi
Kanimozhi

டெல்லி: ஒற்றைக்கருத்தினை முன்னிறுத்தி நாட்டினை வழிநடத்திச் செல்லும் போக்கினை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என்று திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவைக் குழு துணைத் தலைவருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் எஸ். சாந்தினிபீ எழுதிய 'கல்வெட்டுகளில் தேவதாசி' என்னும் நூல் வெளியீட்டு விழா டெல்லி சாகித்திய அகாதமி அரங்கில் திங்கள்கிழமை (மார்ச் 2) நடந்தது.

இந்த நூலினை கனிமொழி வெளியிட அதனை டெல்லி காவல் துறை இணை ஆணையர் ஜெகதீசன் கண்ணன், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா காவல் இணை ஆணையர் எஸ். ராஜேஷ், இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை ஆணையர் பி. அருண்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, "தேவதாசி என்ற சொல் அண்மையில்தான் பல மனங்களில் கலவரத்தை ஏற்படுத்தியது. இது புரிதல் இல்லாததால் ஏற்படும் சிக்கல். முக்கியமாகப் பெரியாரைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், சர்ச்சைகளாகவே சில விஷயங்களைப் பார்க்கின்றனர்.

தேவதாசிகள் குறித்து பொதுப்புத்தியில் இருக்கும் தவறான எண்ணத்தைப் போக்கவே இப்புத்தகத்தை சாந்தினிபீ எழுதியுள்ளார். தேவதாசி வாழ்க்கை முறை குறித்து தொடர்ந்து படித்துவருகிறேன். இந்தப் புத்தகத்திலும் நிறைய தகவல்கள் இருக்கின்றன.

முத்துலட்சுமி ரெட்டி, நாகரத்தினம் அம்மாள் உள்ளிட்டவர்கள் குறித்தும் இந்த நூல் ஆசிரியர் பேசுகிறார். இந்த நூலில், அந்தக் காலத்தில் சிவன், விஷ்ணு கோயில்களில் பூஜை செய்பவர்கள் திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டது குறித்தும் பேசப்பட்டுள்ளது.

எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலம்மாள் போன்ற சிலர் மட்டுமே அந்த இடத்திலிருந்து வந்து மேன்மையான நிலையை அடைந்தாலும் பலர் தேவதாசிகள் என்னும் குலத்திலிருந்து வந்ததால் சுற்றத்தால் ஒதுக்கப்பட்டனர்.

தேவதாசிகள் முறையை ஒழிக்க மிகப்பெரிய பங்களிப்பினை திராவிட இயக்கமே செய்தது. நாம் சுகவாசிகளாக வாழ வேண்டும் என்று இருந்தால் நாளை நமது பிள்ளைகள் போராட வேண்டிய சூழலில் இருப்பார்கள். எனவே, மாற்றத்துக்காகத் தெருவில் இறங்கி போராட வேண்டும்.

ஒற்றைக்கருத்தினை நோக்கி நாட்டை செலுத்திக் சென்றுக்கொண்டிருக்கிற இந்தக் காலக்கட்டத்தில் இதனைத் தடுத்துநிறுத்த வேண்டிய கடமை எல்லோருக்கும் உள்ளது.

எல்லோருக்கும் இங்கே உரிமை உள்ளது. எல்லோரும் எல்லா நம்பிக்கையோடும் சுதந்திரமாக வாழ வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 100 விழுக்காடு வருகையை பதிவு செய்த திமுக உறுப்பினர்!

Last Updated :Mar 3, 2020, 9:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.