ETV Bharat / bharat

14 நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி, இந்தியாவின் புதுத் திட்டம்!

author img

By

Published : Aug 28, 2020, 8:45 PM IST

Military
Military

2025ஆம் ஆண்டுக்குள் உலகின் முன்னணி ஆயுத ஏற்றுமதி நாடாக மாறத் திட்டமிட்டுள்ள இந்தியா, அதற்கான செயல் திட்டத்தை தற்போது உருவாக்கி வருகிறது என மூத்த செய்தியார் சஞ்சய்.கே.பருவா தெரிவித்துள்ளார்.

வரும் 2025ஆம் ஆண்டுக்குள் ராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி மூலம் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்காக 14 நாடுகளை தனது இலக்காகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்தியாளர், பாதுகாப்புத்துறை மூத்த அலுவரிடம் பேசுகையில், ”இந்தியா, தான் உற்பத்தி செய்யும் ராணுவத் தளவாடங்களை விற்பதற்கு 14 நாடுகளைக் கண்டறிந்துள்ளது. அதற்காக ஆசிய, மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது” எனக் கூறினார்.

உலக அளவில் ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சௌதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக SIPRI என்ற அமைப்பு வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மேக் இன் இந்தியா திட்டம் மூலம் ராணுவத் தளவாட உற்பத்தியை இந்தியா தீவிரப்படுத்த உள்ளது.

ஆனால், ஏற்றுமதியில் இந்தியா மிகவும் பின்தங்கி 23ஆவது இடத்தில் உள்ளது. தற்போதைய சூழலில் மொரிஷியஸ், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகள் மட்டுமே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் நாடுகளாக உள்ளன. இது குறித்து பாதுகாப்பு செயலர் ராஜ் குமார் பேசுகையில், ”வளர்ந்து வரும் நாடுகள் பல, இந்தியாவுடன் நட்பு நாடாக உள்ள நிலையில், இந்தியா அவர்களிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தயாரித்து உலகிற்கு வழங்கும் பாதையில் நாடு பயணிக்கிறது” என்றார்.

ரேடார், துப்பாக்கி, ஏனைய முக்கியத் தளவாடங்களை, இந்தியா கூட்டு ரகத்தில் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளது. அதற்காக ஓ.இ.எம். அமைப்பிடம் லைசென்ஸ் பெற முயற்சி எடுத்து வருகிறது. DPEPP என்ற வரைவறிக்கையைத் தயார் செய்து இது தொடர்பான பொதுக் கருத்துகளை இணைய வாயிலாக பாதுகாப்பு அமைச்சகம் பெற்று வருகிறது.

பிரம்மோஸ் போன்ற ஊர்த்திகளை ரஷ்யா போன்ற நாடுகளிடமிருந்து வாங்கும் இந்தியா, தற்போது அந்நாட்டின் தேவையிலிருந்து மெல்ல விலக முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி, ஆர்டினன்ஸ் ஃபேக்டரியையும், பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களையும் சார்ந்தே உள்ளது. இந்தச் சூழலில் தான் சில தனியார் நிறுவனங்களுக்கு பாதுகாப்புத் துறை தொடர்பான ஒப்பந்தங்களைத் தர 2001ஆம் ஆண்டு அரசு முடிவு செய்தது.

அதன் பின்னர்தான், ஆயுதங்கள், பாதுகாப்பு ஊர்திகள், கனரக வாகனங்கள், போர் விமானங்கள், நீரமூழ்கிக் கப்பல்கள், மின்னனு சாதனங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை இந்தியா உற்பத்தி செய்யத் தொடங்கியது.

2020-21ஆம் ஆண்டு காலத்தில், பாதுகாப்பு உற்பத்தித் துறையில் இந்தியா சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. இதில், சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய் பொதுத்துறை நிறுவனங்களிலும், 17 ஆயிரம் கோடி ரூபாய் தனியார் நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வந்தே பாரத் 6ஆம் கட்டத் திட்டம் குறித்து வெளியுறவுத்துறை முக்கியத் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.