விசாகப்பட்டினம் கோபாலப்பட்டினம் ஆர்.ஜி.வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து 'பாலி வினைல் குளோரைடு' என்ற அபாயகரமான வாயு திடீரென கசிந்ததில் பெரும் ரசாயன விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையிலிருந்து கசிந்த அபாயகரமான ரசாயன வாயு சுமார் 3 கி.மீ. சுற்றளவிற்கு பரவியுள்ளது. உயிர் குடிக்கும் இந்த வேதிப்பொருளை சுவாசித்த அப்பகுதி பொதுமக்களுக்கு கண்கள், தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்பட்டதுடன் பலர் மயக்கமடைந்துள்ளனர். இதை சுவாசித்த எட்டு பேர் உயிரிழந்தனர்.
விசாகப்பட்டினத்தில் இயங்கிவரும் இந்த ரசாயன தொழிற்சாலையால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக மாவட்ட சுகாதார அலுவலர் தெரிவித்துள்ளார்.
ரசாயன வாயுவால் பாதிப்படைந்த உள்ளூர்வாசிகள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் சிறுமிகளும் பெண்களும் உள்ளனர். பலர் பீதியடைந்து கதவுகளை மூடி வீடுகளில் தங்கியுள்ளனர். உடனடியாக அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று காவல்துறையினர் சைரன் ஒலித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கிராமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் தீயணைப்பு மீட்புபடையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாயுவின் தாக்கத்தால் உயிரிழந்த எட்டு பேரில் 8 வயது குழந்தை, இரண்டு முதியோர் ஆகியோர் அடங்குவர்.
இந்த வாயு கசிவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.