ஜார்கண்ட் மாநிலத்தில் ஏடிஎம் பண மோசடி அதிகரித்துள்ளதால், காவல் துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். குறிப்பாக, மோசடி கும்பல் பாதுகாவலர்கள் இல்லாத ஏடிஎம்களில்தான் மோசடியில் ஈடுபடுகின்றனர். முதலில், ஏடிஎம் இயந்திரத்தில் ஏதேனும் பொத்தானை ஆஃப் செய்கின்றனர்.
பின்னர், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் திணறும்போது உதவி செய்வதுபோல் உள்ளே நுழைவார்கள். வாடிக்கையாளரிடமிருந்து அட்டையைப் பெறும் அவர்கள், அச்சு எடுக்கும் சாதனத்தில் போலி அட்டையை உருவாக்குகின்றனர். அதேபோல், PIN எண்ணையும் பெற்றுவிடுகின்றனர்.
இதையடுத்து, அருகிலுள்ள ஏதேனும் ஏடிஎம்மில் போலி அட்டையைச் செலுத்தி பணத்தை எடுத்துவிடுகின்றனர். சமீப காலமாக, இத்தகைய திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே, காவல் துறையினர் மக்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளனர்.
அதன்படி, "தெரியாத நபர்களிடம் ஏடிஎம் அட்டை கொடுப்பது, PIN எண் கூறுவது போன்ற செயல்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அட்டை தொலையும்பட்சத்தில், உடனடியாக பிளாக் செய்வது நல்லது ஆகும். ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் பிறகு "கேன்சல்" பொத்தானை அழுத்த வேண்டும். வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியின் எஸ்எம்எஸ் எச்சரிக்கை சேவைகளுக்கும் சப்ஸ்கிரைப் செய்துகொள்வது நல்லது ஆகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.