டெல்லி வன்முறை சம்பவத்தில் உளவுப் பிரிவு அலுவலர் அங்கித் சர்மா என்பவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி வார்டு உறுப்பினர் (கவுன்சிலர்) தாஹிர் உசேன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையில் அவரது வீடு மற்றும் தொழிற்சாலைகளில் காவலர்கள் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து தாஹிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தாஹிர் உசேன் மாயமானார். அவரை காவலர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த நிலையில் தாஹிர் உசேன் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி ஒத்திவைத்தார்.
அங்கித் சர்மா கொலை திட்டமிட்டு நடந்தது என்றும் அதில் தாஹிர் உசேன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தனர் என்று சர்மாவின் தந்தை குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த வழக்கு குறித்து மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “யாரும், எந்த கட்சியாக இருந்தாலும், வன்முறையைத் தூண்டுவதற்கு அவர்கள் பொறுப்பாளர்களாக இருந்தால் அவர்களை காப்பாற்றக்கூடாது” என்றுக் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: 'பாஜக ஒரு அரசியல் வேட்டைக்காரன்' - ஆதீர் ரஞ்சன் சௌத்ரி