ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: "ராணுவம் என்பது எதிரிகளை எதிர்த்துப் போர் புரிய, சட்ட ஒழுங்கை காக்க அல்ல" நீதிபதி சஞ்சய் கிஷன் கருத்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 5:55 PM IST

article 370 Justice Sanjay Kishan Kaul recommends setting up truth and reconciliation commission in j and k
நடுநிலை விசாரணைக்கு கமிஷன் அமைக்க பரிந்துரைத்த நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்

Justice Sanjay Kishan Kaul: காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று (டிச.11) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிற்கு முற்றிலும் மாறாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலின் தீர்ப்பு உரை தற்போது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

டெல்லி: கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கம் செய்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக்கை சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரித்து அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புக் குரல் வந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகப் பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்குகளை, ஒரே வழக்காக இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று (டிச.11), சட்டப்பிரிவு 370 நீக்கம் செல்லும் எனவும், காஷ்மீரில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.

முன்னதாக இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் ஒரே தீர்ப்பை அளித்திருந்தனர். நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றொரு தீர்ப்பை அளித்திருந்தார். நீதிபதி சஞ்சீவ் கண்ணா இரண்டு தீர்ப்புகளுக்கும் உடன்படுவதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி 3:2 என்ற பெரும்பான்மை அடிப்படையில் சட்டப்பிரிவு 370 நீக்கம் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தனது தீர்ப்பு உரையின் போது நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், "காஷ்மீரில் ராணுவத்தின் ஊடுருவலால் மக்கள் மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளனர். 1980களில் இருந்து அங்கு எண்ணற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனால், நடுநிலையான உண்மைக் கண்டறியும் குழுவை அமைக்க நான் பரிந்துரைக்கிறேன்.

அந்த குழுவானது, 1980இல் இருந்து அங்கு நடந்தேறிய மனித உரிமை மீறல்கள் குறித்து நடுநிலையாக விசாரிக்கட்டும். ராணுவம் என்பது எதிரிகளை எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்டது, சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைப்பதற்கு அல்ல. பயங்கரவாத ஊடுருவல்களாலும், ராணுவ நடவடிக்கைகளாலும் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைமுறை தலைமுறையாய் காஷ்மீர் மக்கள் அடைந்து வரும் காயம் ஆற வேண்டும்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து செல்லும். காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்பட வேண்டும். தேர்தல் என்பது ஜனநாயகத்தின் அம்சம் என்பதால் அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நடைபெற வேண்டும். காஷ்மீர் மக்களின் துயரங்களை நான் பார்த்துள்ளேன். அதனைக் கண்டு நான் வேதனைப்படுவதைத் தடுக்க முடியாது. ஆனால் என் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு நான் இந்த உரையை வாசிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவர். அவரது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ளது. இந்நிலையில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அளித்த உரை அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முழு விவரம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.