மோடியைப் புகழ்ந்த குலாம் நபி ஆசாத்தின் உருவபொம்மையை எரித்த காங். கட்சியினர்!

author img

By

Published : Mar 2, 2021, 7:52 PM IST

போராட்டம்

டெல்லி: காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாக அவரின் உருவபொம்மையை எரித்து அக்கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் பிரதமர் மோடியைப் புகழ்ந்ததாகவும் கூறி அவரது உருவபொம்மையை எரித்து அக்கட்சியினர் ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையில் தலைமையை எதிர்த்து கடிதம் எழுதிய 23 பேரை அழைத்து ஆசாத் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

பாஜகவின் தூண்டுதலின்பேரில் அவர் இதனைச் செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தைப் பறித்த மோடியை ஆசாத் புகழ்ந்துள்ளார். ஒரு காங்கிரஸ் தொண்டரால் அதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். பலமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும், ஏன் முதலமைச்சராகவும்கூட இருந்திருக்கிறார்.

ஆசாத்துக்கு காங்கிரஸ் எப்போதும் முக்கியப் பதவிகளையே வழங்கியுள்ளது. கட்சி சரிவை சந்தித்திருக்கும் நிலையில், தன்னுடைய அனுபவத்தைப் பயன்படுத்தி அவர் கட்சியை வலுப்படுத்திருக்க வேண்டுமே தவிர பலவீனப்படுத்தக் கூடாது" என்றார்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையை எதிர்த்துக் கேள்வி கேட்பவர் யாராக இருந்தாலும் அவரை எதிர்த்துப் போரிடுவோம் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஜம்முவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களைச் சந்தித்து ஆசாத் ஆலோசனை நடத்தியிருப்பது தலைமைக்கு எதிரான செயல்படாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் மீர் டெல்லிக்குச் சென்று மூத்தத் தலைவர்களுடன் ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.