ETV Bharat / bharat

பொற்கோயில் அருகே மீண்டும் குண்டு வெடிப்பு - 5 பேர் கைது!

author img

By

Published : May 11, 2023, 1:17 PM IST

Amritsar
பஞ்சாப்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் அருகே மீண்டும் குண்டு வெடிப்பு நடந்துள்ள நிலையில், இது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் அருகே கடந்த 6ஆம் தேதி நள்ளிரவில், ஒரு கட்டிடத்தின் பெரிய ஜன்னல் கண்ணாடி வெடித்தது. இதில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் காயமடைந்தனர். கட்டிடத்தின் அருகில் இருந்த உணவகத்திலிருந்து வெளியான வெப்பத்தால் கண்ணாடி வெடித்திருக்கலாம் என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்தது. இது தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், வெடித்த மர்மப்பொருள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், இன்று(மே.11) அதிகாலையில் பொற்கோயில் அருகே மீண்டும் பயங்கர சத்தத்துடன் மர்மப்பொருள் வெடித்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், வீரியம் குறைந்த குண்டு வெடித்ததாக தெரியவந்துள்ளது. ஐந்து நாட்களில் மூன்றாவது முறையாக பொற்கோயில் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல்துறை அதிகாரி நவுனிஹால் சிங் கூறும்போது, "பொற்கோயில் அருகே குண்டுவெடிப்பு நடத்த சதித்திட்டம் தீட்டியதாக ஐந்து பேரை கைது செய்துள்ளோம். பொது அமைதியை குலைக்கும் நோக்கில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி இந்த வீரியம் குறைந்த வெடிகுண்டை தயாரித்துள்ளனர். இதேபோல் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. சம்பவம் நடந்த இடங்களில் போலீசார் மற்றும் தடயவியல் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: பஞ்சாப் பொற்கோயில் அருகே பெரிய கண்ணாடி வெடித்து சிதறியதால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.