நாட்டில் யானை தாக்கி 1,581 பேர் உயிரிழப்பு - மத்திய அரசு

author img

By

Published : Mar 17, 2023, 5:36 PM IST

மாநிலங்களவை

இந்தியாவில் 3 ஆண்டுகளில் மட்டும் யானை தாக்குதலில் 1,581 பேர் உயிரிழந்ததாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி: இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் யானை தாக்குதல் காரணமாக 1,581 பேரும், புலி தாக்குதல் காரணமாக 207 பேரும் உயிரிழந்தாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே இன்று (மார்ச் 17) மாநிலங்களவையில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.வீரேந்திர ஹெக்கடே நாட்டில் ஏற்பட்டுவரும் மனித-வனவிலங்கு மோதல் சம்பவங்கள் குறித்தும், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த கேள்விக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார். இதுகுறித்து அவர் அளித்த பதிலில், 2019, 2020, 2021 ஆகிய 3 ஆண்டுகளில் மனித-வனவிலங்கு மோதல் சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ளன. அதில் யானைகள் தாக்கி 1,581 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டில் 585 பேரும், 2020 ஆம் ஆண்டில் 461 பேரும், 2021 ஆம் ஆண்டில் 535 பேரும் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் அதிகபட்சமாக 322 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் 2019 ஆம் ஆண்டில் 117 பேரும், 2020 ஆம் ஆண்டில் 93 பேரும், 2021 ஆம் ஆண்டில் 112 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் 292 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 2019 ஆம் ஆண்டில் 84 பேரும், 2020 ஆம் ஆண்டு 74 பேரும், 2021 ஆம் ஆண்டு 133 பேரும் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக மேற்கு வங்க மாநிலத்தில் 240 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களில் 2019 ஆம் ஆண்டு 116 பேரும், 2020 ஆம் ஆண்டு 47 பேரும், 2021 ஆம் ஆண்டு 77 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

புலி தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில், மொத்தமாக 207ஆக உள்ளது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டு 44 ஆகவும், 2021 ஆம் ஆண்டு 57 ஆகவும், 2022 ஆம் ஆண்டு 106 ஆகவும் பதிவாகி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 141 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. 2020 ஆம் ஆண்டு 25 பேரும், 2021 ஆம் ஆண்டு 32 பேரும், 2022 ஆம் ஆண்டு 84 பேரும் உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 2020ஆம் ஆண்டில் 4 பேரும், 2021 ஆம் ஆண்டில் 11 பேரும், 2022 ஆம் ஆண்டில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கறிக்கடைக்காரர்கள் முகத்தில் சிறுநீர் கழித்த போலீஸ்காரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.