ETV Bharat / bharat

11,12ம் வகுப்பு தேர்வில் தோல்வி: ஆந்திராவில் 9 மாணவர்கள் தற்கொலை!

author img

By

Published : Apr 28, 2023, 9:52 PM IST

Andra sucide
ஆந்திரா தற்கொலை

ஆந்திர மாநிலத்தில் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி: ஆந்திராவில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 26ம் தேதி வெளியிடப்பட்டது. 11ம் வகுப்பில் 61 சதவீதம் பேரும், 12ம் வகுப்பில் 72 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்தனர். இந்நிலையில் தேர்வில் தோல்வியடைந்த 9 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சித்தூர் மாவட்டம், எடவாகிலி பகுதியைச் சேர்ந்தவர், அனுஷா (17). தேர்வு விடுமுறையில் கர்நாடகாவில் உள்ள பாட்டியின் வீட்டுக்குச் சென்றிருந்தார். கடந்த புதன்கிழமை தேர்வில் தோல்வி அடைந்த தகவலை அனுஷாவுக்கு அவரது தாய் கூறியுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவதாகக் கூறிய அவர், பாட்டியின் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

சித்தூர் மாவட்டம், பெர்ரெடிபள்ளியைச் சேர்ந்த பாபு (17) 12ம் வகுப்பு கணக்கு தேர்வில் தோல்வியைடந்தார். விரக்தியடைந்த அவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் அனகாபள்ளியைச் சேர்ந்த துளசி கரண் (17) 11ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீகாகுளம் மாவட்டம் தண்டு கோபாலபுரம் பகுதியை சேர்ந்த பலகா தருண் (17) தேர்வில் தோல்வியடைந்ததால் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்தார்.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அத்மகுரு அகிலாஸ்ரீ (16), பொனேல ஜெகதீஷ் (18), அனந்தபூர் மாவட்டம் ஹனக்கன்னஹால் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (17), நந்திகாமாவைச் சேர்ந்த ஷேக் ஜான் சைதா (16), சில்லகல்லுவைச் சேர்ந்த ரமண ராகவா ஆகியோரும் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் இரு மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவர்கள் விபரீத முடிவை எடுக்க வேண்டாம் என காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

students sucide
ஆந்திரா தற்கொலை

தற்கொலை குறிப்பு: தற்கொலை எதற்கும் தீர்வல்ல... இவ்வுலகில் அனைத்திற்கும் தீர்வு உண்டு; அனைவருக்கும் வாழ்க்கை உண்டு, அனைத்தையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.

இதையும் படிங்க: மேற்குவங்கத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 14 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.