திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்ட விழா கொடியேற்றம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
Published : Feb 27, 2024, 5:37 PM IST
திருவாரூர்: பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோயிலில், ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. மேலும், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடி, எடை 300 டன், திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்புச் சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தேர் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களைக் கொண்டு கட்டப்பட்டு, கீற்று வேய்ந்து 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சேலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. மிக பிரமாண்டமான ஆழித்தேரின் தியாகராஜா சுவாமி வீற்றிருக்க, 4 வீதிகளில் வீதியுலா வரும் அழகும் காண்போர் வியக்கத்தக்கது.
அஸ்த நட்சத்திரத்தில் கொடியேறி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாக கருதப்படுகிறது. அந்த வகையில், வரும் மார்ச் 21ஆம் தேதி ஆயில்ய நட்சத்திரம் வருவதை ஒட்டி, அன்றைய தினம் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இன்று (பிப்.27) திருவாரூர் தியாகராஜர் கோயிலின் கொடியேற்று விழா நடைபெற்றது.
தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதோடு, கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் உச்சரிக்க, மேளதாளங்கள் வாசிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கொடியேற்றி வைக்கப்பட்டு உற்சவம் நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.