பேருந்தை வழிமறித்து நடத்துநர்; ஓட்டுநரைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய கும்பல்.. வைரலாகும் வீடியோ!
Published : Feb 24, 2024, 9:20 PM IST
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானியிலிருந்து, சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு தனியார் பேருந்தை ஓட்டுநர் ரவிக்குமார் என்பவர் நேற்று (பிப்.23) இரவு இயக்கி வந்துள்ளார். அப்போது குமாரபாளையம் அருகே பேருந்தின் மீது உரசும்படி சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது.
இதனால் தனியார் பேருந்து ஓட்டுநர் ரவிக்குமார் மற்றும் சரக்கு வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து உள்ளது. அந்தச் சரக்கு வாகனத்தில் திருவிழாவிற்காக வி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து கொண்டிருந்தாக தெரிகிறது.
இந்த நிலையில், வாய்த்தகராறு குறித்த தகவல் வி.என்.பாளையம் ஊர்மக்களுக்குத் தெரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சங்ககிரி பேருந்து நிலையம் அருகே வந்த தனியார் பேருந்தை வழிமறித்து நிறுத்திய கும்பல், பேருந்துக்குள் புகுந்து ஓட்டுநர் ரவிக்குமார் மற்றும் பயிற்சி நடத்துநர் ஜெயக்குமார் ஆகியோரைக் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.
இருவரையும் பேருந்தின் உள்ளேயே கீழே தள்ளி காலால் எட்டி உதைத்து கடுமையாக அந்தக் கும்பல் தாக்குதல் நடத்தி அங்கிருந்து தப்பியது உள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இரு தரப்பினரும் காவல்துறை தரப்பில் சமாதானமாகச் செல்லக் கூறியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தனியார் பேருந்து வழிமறித்துத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சக தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.