பட்டாக்கத்தியுடன் உலா வந்த சிறுவனின் வீடியோ வைரல்..போலீஸ் அதிரடி நடவடிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 7:58 AM IST

thumbnail

கோவை: பொள்ளாச்சி சாலையில், குடிபோதையில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 2 நபர்களில் ஒருவரை மதுக்கரை போலீசார் கைது செய்தனர். உடனிருந்த மற்றொரு நபர் தப்பியோடிய நிலையில் அவரை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

கோவை, பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (பிப்.22) இரவு, இரண்டு நபர்கள் குடி போதையில் இருசக்கர வாகனத்தில் சிக்னல்களில் நின்றுகொண்டிருந்த நிலையில், கையில் வைத்திருந்த பட்டா கத்தியுடன், இருசக்கர வாகனத்தில் வட்டமடித்ததோடு, சாலையில் கத்தியை உரசியபடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மதுக்கரை போலீஸார், மது போதையில் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டவரை மடக்கிப் பிடித்து, அவரது இரு சக்கர வாகனம் மற்றும் பட்டா கத்தியைப் பறிமுதல் செய்து கைது செய்தனர். தொடர்ந்து, தலைமறைவான மற்றொரு நபரைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன்(17) என்றும் இவர் ஏற்கனவே, தனியார் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தவர் நண்பர்களோடு பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து, சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடிவருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.