கும்பகோணம் மங்களம் யானையை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.7.20 லட்சம்! - முழு செலவையும் ஏற்ற தனியார் நிறுவனம் - Adi Kumbeswarar Temple

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 9:54 AM IST

thumbnail

தஞ்சாவூர்: கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் மங்களம் (58) என்ற யானை கோயில் யானையாக உள்ளது. இந்த யானைக்கான பராமரிப்பு செலவையும் முழுமையாக ஏற்றுக் கொண்ட நாராயணி தனியார் நிதி நிறுவனம் இதற்கான பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.

கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில், மகாமக பெருவிழா தொடர்புடைய பன்னிரெண்டு முக்கிய சைவ திருத்தலங்களில் முதன்மையான தலமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு, 1980ஆம் ஆண்டு, மறைந்த காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 14 வயது பெண் யானையை மங்களம் என பெயரிட்டு வழங்கினார்.

கடந்த 44 ஆண்டுகளாக, கோயில் நிர்வாகத்தால் மங்களம் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மங்களம் யானையை பராமரிக்க மாதந்தோறும் ரூ.60 ஆயிரம் தேவைப்படுகிறது என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மங்களம் யானையின் முழுமையான பராமரிப்பு செலவினத்திற்காக மாதந்தோறும் ரூ.60 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் வழங்க, நாராயணி தனியார் நிதி நிறுவனம் நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

இதற்காக, நாராயணி தனியார் நிதி நிறுவனத் தலைவர் கார்த்திகேயன், முதல் மாத பராமரிப்பு தொகையான ரூ.60 ஆயிரத்திற்கான காசோலையை, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பாலசுப்பிரமணியனிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “மங்களம் யானையின் முழு பராமரிப்பு செலவினை எங்கள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருவதால், அதற்காக எங்கள் நிதி நிறுவனம் சார்பில், ரூ.50 லட்சம் நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.