ETV Bharat / state

அசந்த நேரத்தில் கைவரிசைய காட்டிய பெண்கள்.. கடைக்காரரே போலீசிடம் பிடித்து கொடுத்ததன் பின்னணி என்ன? - Dharmapuri Dress shop theft

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 10:34 PM IST

Dharmapuri theft: தருமபுரியில் துணிக்கடையில் வாடிக்கையாளர் போல் நுழைந்து, ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை நூதன முறையில் கொள்ளையடித்த பெங்களூரைச் சேர்ந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜவுளிக்கடையில் கொள்ளயடித்த பெண்கள்
ஜவுளிக்கடையில் கொள்ளயடித்த பெண்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

தருமபுரி: தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வணிக வளாகங்களில் உள்ள ஜவுளி கடைகள் உட்பட பல கடைகளில் செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் களவு போவதாக தருமபுரி மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

சிசிடிவி காட்சிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில், தருமபுரி நகர போலீசார் வணிக வளாகங்கள் மற்றும் ஜவுளி கடைகளை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் திருட்டு நிகழ்ந்துள்ளது.

இதன்படி, கடந்த மே 16ஆம் தேதி, அப்பகுதியில் இருக்கும் துணிக்கடைக்கு வந்த இரண்டு பெண்கள் 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரெடிமேட் துணிகளை நூதனமான முறையில் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைபற்றி ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில், கடையில் துணிகளை திருடிச் சென்ற பெண்கள் தருமபுரியில் சுற்றித் திரிவதாக தகவல் தெரிந்த கடையின் உரிமையாளர், அவர்களைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

அதன் பின்னர் பிடிபட்ட இரு பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், அவர்கள் சுமதி மற்றும் சுஜாதா என்பதும், இருவரும் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், அவர்கள் இருவரும் இது போன்று வேறு எங்காவது திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து கொள்ளையடிக்கப்பட்ட கடையின் உரிமையாளர் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்னர் என்னுடைய கடையில் இரண்டு பெண்கள் கடை ஊழியர்களை ஏமாற்றி துணிகளை திருடிச் சென்றனர். அவர்களை தற்போது பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துவிட்டோம்.

மேலும், தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் திருட்டு போகின்றன. எனவே, வரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க காவல்துறை தரப்பில் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதையும் படிங்க: பேக்கரி ஓனரை கத்தியால் தாக்கிய இளைஞர்.. திருப்பூரில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.