ETV Bharat / state

எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையை மீண்டும் திறக்க அனுமதி? அரசுத் தரப்பு முன்வைத்த வாதம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 7:03 PM IST

ready-to-allowed-coromandel-reopen-after-follows-stipulations-said-tn-govt-to-ngt
எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலையை மீண்டும் திறக்கலாம்? தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் தமிழக அரசு தெரிவித்தது என்ன?

Coromandel reopen after follows stipulations: சென்னை, எண்ணூர் அருகே இயங்கிவரும் கோரமண்டல் தொழிற்சாலை, அரசு விதித்துள்ள அறிவுறுத்தல்களை கடைபிடிக்க தயாராக இருந்தால் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை: எண்ணூர் அருகே இயங்கி வரும் கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து, கடந்த டிசம்பர் மாதம் திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தினர். ஏற்கனவே பல முறை விசாரணை நடந்த நிலையில், இன்று (மார்ச் 5) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், அரசு சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழு, பாதிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்த பின்னர், தொழிற்சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய விதிகளை வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த வல்லுநர்கள் குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, பல்வேறு தகவல்களை சேகரித்த பின் இந்த அறிவுறுத்தல்களை வகுத்துள்ளது. அதை தொழிற்சாலை பின்பற்றினால், தொழிற்சாலை திறக்க அரசு அனுமதி அளிக்கும் என கூறினார்.

தொடர்ந்து கோரமண்டல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசு அளித்த அறிவுறுத்தல்களை நாங்கள் பின்பற்றத் தயாராக இருப்பதாகவும், ஆனால் சில அறிவுறுத்தல்களை பின்பற்றுவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. தொழிற்சாலை அமைக்கும் வல்லுநர்கள் குழுவுடன் அரசு அமைத்த வல்லுநர்கள் குழு உடன் சேர்ந்து மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.

தற்போது, பாதிக்கப்பட்ட குழாய் அருகில் மக்கள் போராட்டம் நடைபெறுவதால், அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அரசு வல்லுநர்கள் குழு உடன், எங்கள் குழு ஆய்வு செய்த பிறகு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையடுத்து தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், அரசு அமைத்த வல்லுநர்கள் குழு அளித்த அறிவுறுத்தல்களில் எதை பின்பற்ற முடியாது? ஏன் பின்பற்ற முடியாது என உரிய விளக்கத்துடன் தொழிற்சாலை, அரசிடம் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மதுரையில் பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? - அமைச்சர் பிடிஆர் அளித்த விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.