ETV Bharat / state

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு தொடர்பான வழக்கு: புலன் விசாரணை அதிகாரியிடம் நீதிபதி சரமாரி கேள்வி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 8:02 PM IST

Etv Bharat
Etv Bharat

Minister Thangam Thennarasu: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் 2021ஆம் ஆண்டுக்குப் பின் மேல் விசாரணை நடத்த வேண்டும் எனத் தோன்றியது ஏன், சாதாரண வழக்குகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா? என, லஞ்ச ஒழிப்புத் துறை புலன் விசாரணை அதிகாரியிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்தாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அந்த வழக்கில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த உத்தரவு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (பிப்.29) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வந்தது. அமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆதாரங்களைப் புறக்கணித்து விட்டு வழக்குத் தொடர்வது எப்படி நியாயமான விசாரணையாகக் கருத முடியும்.

வழக்குப்பதிவு செய்யும் முன் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கைப் பரிசீலித்திருக்க வேண்டும். வழக்கில் முதல் புலன் விசாரணை அதிகாரி சேகரித்த ஆதாரங்களை மாற்றாமல், கூடுதல் ஆதாரங்களைச் சேர்ப்பது மறு விசாரணை அல்ல, மேல் விசாரணை தான். இந்த மேல் விசாரணையும், காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதலைப் பெற்றே மேற்கொள்ளப்பட்டது.

மேல் விசாரணைக்குப் பின், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கலாம். அதற்குச் சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு எந்தத் தடையும் இல்லை என வாதிட்டார்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரி பூமிநாதனை அழைத்து, எத்தனை ஆண்டுகளாக ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு 7 ஆண்டுகளாக ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளைப் புலன் விசாரணை செய்து வருவதாகப் புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன் பதிலளித்தார்.

இந்த 7 ஆண்டுகளில், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய மனுவில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை நடத்தியிருக்கிறீர்களா? 2016ம் ஆண்டு விடுவிக்கக் கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனப் பதில் மனுத் தாக்கல் செய்யும் போது மேல் விசாரணை நடத்தத் தோன்றவில்லையா? 2021ல் திடீரென மேல் விசாரணை செய்ய வேண்டும் எனத் தோன்றியது ஏன்? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த புலன் விசாரணை அதிகாரி பூமிநாதன், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வமான வாதத்தின் அடிப்படையில் மேல் விசாரணை கோரப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதே நடைமுறையைச் சாதாரண வழக்குகளில் பின்பற்றுவீர்களா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதத்துக்காக விசாரணையை மார்ச் 8ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: தனியாக போட்டியிட தயார்.. செல்வப்பெருந்தகை பதிலின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.