ETV Bharat / state

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. ஏன் போலியோ சொட்டு மருந்து முக்கியமானது?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 6:01 AM IST

Updated : Mar 3, 2024, 9:53 AM IST

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

Polio Drops camp 2024: குழந்தைகளை பாதிக்கும் போலியோ வைரஸ் நோயை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

சென்னை: குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்படாமல் இருக்க, ஆண்டுதோறும் வழக்கப்பட்டு வரும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம், தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 3) நடைபெறுகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

இம்மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

முக்கிய அம்சங்கள்:

1.சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

2. தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவுவது அல்லது சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.

3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

4. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

5. விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

6. புலம்பெயர்ந்து வாழும் பெற்றோரின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

7. போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் (Transit Booths) சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

8. போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

9. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்தின் முக்கியத்துவம்: 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கக்கூடிய தொற்று மற்றும் ஆபத்தான வைரஸ் கிருமிகளால் ஏற்படக்கூடியது போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோய். இந்த நோயால் குழந்தைகளின் கை, கால் தசைகள் அல்லது சில உறுப்புகள் பாதிக்கப்பட்டு, அவற்றின் இயங்கும் சக்தி இழந்து, உடலில் நிரந்தர பக்கவாதம் ஏற்படுத்துகிறது.

சில நேரங்களில் போலியோ வைரஸ், பாதிக்கப்பட்ட நபரின் சுவாச தசைகளைத் தாக்கி, அசையாத தன்மையை ஏற்படுத்துகிறது. இதனால் நோயாளிகள் தொற்று காரணமாக இறக்கவும் நேரிடும். இத்தகைய கொடிய போலியோ நோய்க்கு சிகிச்சைகள் ஏதும் இல்லை.

இவற்றை தடுத்து, குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழக்கப்பட்டு வருகிறது.

போலியோ இல்லாத தேசத்தை உருவாக்கவும், குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்குவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி உலக போலியோ தினம் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாலையோரத்தில் கொட்டப்படும் கோழி இறைச்சி கழிவுகள்; நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

Last Updated :Mar 3, 2024, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.