ETV Bharat / state

"பரந்தூர் புதிய விமான நிலையத்தை அமைக்க விடமாட்டோம்" - ஸ்ரீபெரும்புதூர் நாதக வேட்பாளர் சிறப்புப் பேட்டி! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 9:45 PM IST

Chennai
சென்னை

NTK Candidate Ravichandran: சென்னை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் அமைய இருக்கும் பரந்தூர் புதிய விமான நிலையத்தை அமைக்க விடமாட்டோம் என நாம் தமிழர் வேட்பாளர் வேட்பாளர் ரவிச்சந்திரன் ஈ டிவி பாரத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

"பரந்தூர் புதிய விமான நிலையத்தை அமைக்க விடமாட்டோம்" - ஸ்ரீபெரும்புதூர் நாதக வேட்பாளர் சிறப்பு பேட்டி!

சென்னை: வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் மைக் சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் ரவிச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தொகுதியின் பிரச்சாரங்கள் குறித்தும் களப்பணிகள் குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்குச் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "ஸ்ரீ பெருமந்தூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் களத்தைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்குச் சாதகமாக உள்ளது. பொதுவாகத் தமிழ்நாடு முழுவதும் நான்கு முனை போட்டிகள் என கூறுகிறார்கள். ஆனால் நான்குமுனை போட்டியே கிடையாது. நாம் தமிழர் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே உண்மையான போட்டி நிலவுகிறது. இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 68 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

சின்னம் அறிவிப்பதற்கு முன்பாகவே பொதுமக்கள் அனைவரும் நம் துயரங்களைத் துடைக்கப் போகும் நாம் தமிழர் கட்சி சின்னம் எது என காத்துக் கொண்டிருந்தனர். நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் தொழில் நுட்ப பிரிவினர்களும் மிகவும் வலுவாக உள்ளனர். எனவே மக்களிடம் தங்கள் மைக் சின்னத்தைக் கொண்டு சேர்த்து விட்டோம். இன்னும் நேரம் இருக்கிறது தொடர்ந்து மக்களிடம் சின்னத்தைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம்.

இதற்கு முன்பு ஸ்ரீ பெருமந்தூர் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் பாதாளச் சாக்கடை திட்டம், சுத்தமான குடிநீர் திட்டங்கள், சாலைகள் உள்ளிட்ட பணிகளை எதுவும் சரிவரச் செய்யவில்லை. அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில்தான் பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு திமுக, காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய நான்கு கட்சிகளும் ஆதரவாக இருக்கிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சி நாம் தமிழர் மட்டும் தான், அதனை அமைய நாங்கள் விடமாட்டோம். அதற்கு மாற்றாகப் பழைய விமான நிலையத்தை ஒட்டி பல ஏக்கர் நிலங்கள் உள்ளது, கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் பல ஏக்கர் நிலம் உள்ளது, அந்த இடங்களைப் பயன்படுத்தி விமான நிலையம் விரிவாக்கம் செய்யலாம்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "பாஜகவின் ஆட்சி ஏப்ப தான் முடிய போகிறது என மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் ஆட்சியில் பாதிக்கப்படாத உயிரினங்களே கிடையாது. கார்ப்பரேட்டுக்கான அரசியலை மட்டுமே பாஜக செய்து கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்டுக்கான கடன்களை ரத்து செய்துள்ளனர். ஆனால் நாம் ஒவ்வொரு குடிமகனும் வரி கட்டியுள்ளோம். இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் ஏழைகளும் விவசாயிகளும் தான்.

டெல்லியில் விவசாயிகள் போராடினால் பாஜக வஞ்சிக்கிறது அதேபோல் தமிழ்நாட்டில் விவசாயிகள் உரிமை கேட்டுப் போராடினால் திமுக அரசு அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போட்டுப் பயமுறுத்துகிறது. இனிமேல் ஏழையும் விவசாயிகளும் அவர்களுக்கான ஆட்சியை அவர்களைப் பெற்றுக்கொள்வார்கள். எங்களின் ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு இனிமே திமுக காங்கிரஸ் பாஜகவிடம் கையேந்தி நிற்கின்ற நிலைமை இருக்காது.

தமிழ்நாட்டு மக்களே 60 ஆண்டுகளாகத் திராவிட ஆட்சிகளைப் பார்த்து வெறுத்துப் போய் விட்டார்கள். மக்களுக்குத் தேவையானது இலவசம் கிடையாது. அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்குச் சரியான வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்போம்.

இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமை ஆக்காமல் காப்போம். பொது மக்களின் நில உரிமை இயக்காமல் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு நிலம் கொடுக்கக்கூடிய திட்டங்களைக் கொண்டு வருவோம். குடிநீரை இனி யாரும் காசு கொடுத்து வாங்க வேண்டாம் அதற்கான சிறப்புத் திட்டங்கள் வைத்துள்ளோம்.

தமிழ்நாட்டிலேயே ஸ்ரீபெரும்புதூர் தொகுதிதான் அதிக வருவாயை ஈட்டி தருகிறது. ஆனால் எங்கள் தொகுதி மக்கள் மிகவும் வறுமையில் உள்ளனர். நீர் நிலைகளில் அதிகம் உள்ள தாம்பரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குப்பைகள் கொட்டி வைத்துள்ளனர். தோல் தொழிற்சாலைகளின் கழிவுகளை ஏரிகளில் கலக்கின்றனர், இதனை அனைத்தையும் தடுத்து நிறுத்துவோம்.

சென்னையின் நுரையீரலான ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, இரட்டை ஏரி, தாம்பரம் ஏரி,போரூரில் ஏரி அனைத்தையும் தூய்மையாக மீட்டெடுப்போம். ஒரு சதுர கிலோமீட்டர் நகரத்திற்கு 25 ஏக்கர் பரப்பளவு உள்ள நீர் நிலைகளை உருவாக்குவோம். அதில் நடைபாதை, பெரியவர்களுக்கான பயிற்சிக் கூடங்கள் அனைத்தும் இடம்பெறும்.

அனைத்து நீர் நிலைகளையும் இணைத்து நீர் வழி பாதியை உருவாக்குவோம். சுற்றுச்சூழல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் வகையில் திட்டங்களைக் கொண்டு வருவோம். மக்கள் வாழத் தகுந்த சிறந்த இடமாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை உருவாக்குவோம். அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்பத்தூரில் 2 லட்சத்திற்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிக்குச் செல்கிறார்கள்.

இதனைப் பார்த்தால் நாம் சென்னையில் வசிக்கிறோமோ அல்லது வேறு மாநிலத்தில் இருக்கின்றோமா என்கிற எண்ணம் தோன்றுகிறது. என் தொகுதியில் 80 சதவீதம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். அதேபோல் 75 சதவீதத்திற்கும் அதிகமான கல்வித் தகுதியில் இருக்கின்றோம்.ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள்தான் சிப்காட் உருவாவதற்கு நிலங்கள் கொடுத்தனர் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் 90% தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: பிரச்சாரத்தின் போது அழுத ஜோதிமணி.. ஆறுதல் கூறிய பொது மக்கள்! - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.