தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலை அடுத்துள்ள நாகக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், மருத்துவக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, கடந்த சனிக்கிழமை (ஏப்.6) இரவு மருத்துவக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், நாகக்குடி கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாகக்குடி கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், தகராறில் ஈடுபட்ட மருத்துவக்குடி கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, நாகக்குடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நாகக்குடி கடை வீதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையாத பொதுமக்கள், 3 கிலோ மீட்டர் நடந்து சென்று சுவாமிமலை கடைவீதியில், தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், கும்பகோணம் திருவையாறு முக்கிய சாலையில் போக்குவரத்து தடைபட்டு உள்ளது.
இதையும் படிங்க: மதுரவாயலில் கஞ்சா விற்பனை.. 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது! - College Students Selling Ganja