சென்னை: சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரைத் தமிழ் நடுவணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேரில் சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விக்கிரமராஜா கூறுகையில், "தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகத் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்துத் தேர்தல் அறிக்கை வெளியிட்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளோம்.
வியாபாரிகள் சார்பில் கடை உரிமம் பெறுவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிவித்து உள்ளோம். அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளோம். ஜிஎஸ்டி தொடர்பாக 2017ஆம் ஆண்டு முதல் அனுப்பப்படுகின்ற நோட்டீஸ்கள் எல்லாம் ஆய்வு செய்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
இதை அனைத்தையும் தமிழக முதலமைச்சர் கேட்டறிந்து கட்டாயம் செய்து தரப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூபாய் 50 ஆயிரம் வரை கொண்டு செல்லலாம் என அறிவித்திருந்தனர். 50 ஆயிரம் என்பது மிகக்குறைந்த தொகையாக உள்ளது. வணிகர்கள் அதனைக் கொண்டு செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. இதன் காரணமாக 2 லட்சம் வரை அதை உயர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையிடம் 2 முறை மனு அளித்துள்ளோம்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் வியாபாரிகள் பணம் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாபாரிகள் என்று தெரிந்தும், வியாபாரிகளின் பணத்தை மட்டுமே பறிமுதல் செய்து வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாபாரிகளைப் பழிவாங்க வேண்டாம் என தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறை சோதனை.. மூன்று நாட்களில் ரூ.5 கோடி பறிமுதல்! - IT Raid In TN