ETV Bharat / state

ராமரை கோயிலை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை - மத்திய அமைச்சர் வி.கே சிங்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 11:02 AM IST

Minister V.K Singh
மத்திய அமைச்சர் வி.கே சிங்

Minister V.K Singh: அயோத்தி ராமர் கோயில் ஒற்றுமை மற்றும் பொதுவுடமையின் அடையாளம், ராமர் கோயிலை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய இணை அமைச்சர் வி.கே சிங் தெரிவித்தார்.

திருநெல்வேலி: நெல்லை சி.என் கிராமத்தில் "நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்" என்ற தலைப்பின் கீழ் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய தரைவழி நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங், நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நைனார் நாகேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் வி.கே சிங் கூறியதாவது, "அரசு செய்யும் நலத்திட்டங்களில் முழு பலன்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மத்திய அரசின் நோக்கம். ஆனால் விளம்பரத்திற்காக மத்திய அரசு செயல்படுகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் குற்றம் சாட்டுவதை முற்றிலும் மறுக்கிறேன்.

மத்திய அரசு களத்தில் இறங்கி மக்களுக்கான தேவைகளை திட்டங்களாக உருவாக்கி கொண்டு சேர்த்து வருகிறது. வாகனத்தின் அனைத்து உதிரி பாகங்களும் ஒன்று சேர்ந்து பணி செய்தால் மட்டுமே வாகனம் சிறப்பாக ஓடும் என்பதைப் போல மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு சேர்க்க முடியும்.

அயோத்தி ராமர் ஒற்றுமை மற்றும் பொதுவுடமையின் அடையாளம், அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை. தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 18 முக்கிய மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்றுள்ளது.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. சில இடையூறுகள் இருந்த நிலையில், அதுவும் சரி செய்யப்பட்டுள்ளது. விரைவில் விமான நிலையம், முழு பணிகளும் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பரந்தூர் விமான நிலையத்திற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை. மாநில அரசே அந்த இடத்தை தேர்வு செய்து தந்திருக்கிறது.

தற்போது அந்த இடம் விவசாய நிலங்களாக இருப்பதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநில அரசு இந்த பிரச்சினைகளை சரி செய்து தர வேண்டும் அல்லது சரியான வேறு இடத்தை தேர்வு செய்து தர வேண்டும். மக்களிடம் நேரடியாக சென்று அரசின் திட்டங்களை விளக்குவதுடன் மக்களுக்கு தேவையான பணிகளை செயல்படுத்தும் நோக்கில் தான் பாஜக செயல்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் - மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.